Pages

Thursday, 15 November 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

தேவை ஓர் இறைதூதர்…( தொடர்…)


ஒட்டகங்களின் பலியீடுகள் அனைத்தும் முற்றுப் பெற்றதும், மீட்கப்பெற்ற தனது மகனுக்குத் தக்கவொரு துணையைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டார் அப்த்-அல்-முத்தலிப். தீர்க்கமான சில விசாரணைகளின் பின்னர் வஹ்ப் என்பாரின் மகள் ஆமினாவைத் தேர்ந்தெடுத்தார். குஸையின் சகோதரனான ஸுஹ்ராவின் பேரன் இந்த வஹ்ப்.

ஸுஹ்ரா கோத்திரத்துத் தலைவனாகவிருந்து சில வருடங்களின் முன்னர் மரணித்துவிட்ட வஹ்ப்பின் இடத்தைப் பெற்றுக் கொண்ட அவரது சகோதரன் வுஹைப்பின் பொறுப்பிலேயே இப்போது ஆமினா இருந்தார். வுஹைபுக்கும் ஹாலா என்ற பெயரில், திருமண வயதை எட்டிய ஒரு மகள் இருந்தார். தனது மகனுக்கு ஆமினாவை மணமுடிக்க முடிவு செய்த அப்-அல்-முத்தலிப், ஹாலாவைத் தானே மணஞ்செய்து கொள்ளவென வுஹைபை வேண்டினார். வுஹைப் இதனை ஏற்றுக் கொள்ளவே இரண்டு திருமணங்களையும் ஒரே நேரத்தில் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

குறிப்பிட்ட தினத்தில் அப்த்-அல்-முத்தலிப் தனது மகனுடைய கையைப் பிடித்துக் கொள்ள, இருவருமாக பனீஸுஹ்ராக்களின் - (ஸுஹ்ராவின் வழி வந்த மக்கள். இப்ன்{மகன்} ஒருமை; பனீ பன்மை) குடியிருப்புப் பிரதேசத்தை நோக்கிச் சென்றனர். வழியில் பனீ அஸத்களின் குடியிருப்புப் பிரதேசத்தை அவர்கள் கடந்து செல்ல வேண்டியிருந்தது. இச்சந்தர்ப்பத்தில் வரகாஹ்வின் சகோதரி குதைலா தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். 

மக்காவில் அனைவருமே நடைபெறப் போகும் மிகப் பெரிய திருமண வைபவம் குறித்து அறிந்திருந்தனர். குதைலாவோ தான் காண நாடியிருப்பதைக் காண வேண்டியே வாசலில் நின்றிருந்தார் போலும். அப்த்-அல்-முத்தலிபுக்கு இப்போது எழுபது வயதாகியிருந்தது. எனினும் எல்லா வகையிலும் தன் வயதை மிஞ்சியதோர் இளைஞனாகவே அவர் தோன்றினார். இயல்பாகவே பெருமிதம் கொண்ட இரு மணவாளர்களும் சிறப்பானதொரு வைபவத்துக்காக மெதுவாக நடந்து செல்லும் கம்பீரம் கவர்ச்சியானதாக இருந்தது.

இருவரும் அருகே வர குதைலாவின் பார்வை இளையவர் மீது மட்டுமே பதிந்திருந்தது. அழகில் அப்த்-அல்லாஹ் தனது காலத்து யூஸுபாகவே விளங்கினார். குறைஷியரின் முதியோரும் பெண்களும்கூட அவருக்கு நிகரான ஒருவரைக் கண்டிருக்கவில்லை. வாலிப காலத்து உச்சத்தில் தனது இருபத்தைந்தாவது வயதில் அவர் இருந்தார். முன்னைய பல சந்தர்ப்பங்களில் போலவே, குதைலா அவரைக் கண்டு பிரமித்துப் போயிருந்தார். அப்த்-அல்லாஹ்வின் முகத்தில் அப்போது காணப்பட்ட ஒளிவினைக் கண்ணுற்ற அவரது பிரமிப்பு பன்மடங்காயது. அது இவ்வுலகத்தினின்றும் அப்பாற்பட்டு ஒளிருவதாகவே குதைலாவுக்குத் தோற்றியது. அப்த்-அல்லாஹ்தான் எதிர்பார்க்கப்பட்டு வரும் இறை தூதரோ?…அல்லது அவ்விறைதூதரின் தந்தையார்தான் இவரோ?

அவர்கள் தன்னைக் கடந்து செல்லும்போது ஏதோ ஓர் உணர்வினால் உந்தப்பட்டு “ ஓ! அப்த்-அல்லாஹ் ” என அழைத்தார் குதைலா. தனது ஒன்று விட்ட சகோதரியுடன் உரையாடி வரும்படி கூறுவது போலத் தந்தையார் அப்த்-அல்லாஹ்வின் கையை விடுவித்தார். திரும்பிய அப்த்-அல்லாஹ்விடம் நீர் எங்கே போகிறீர் என வினவினார் குதைலா. வெறுமனே “ எனது தந்தையாருடன் போகிறேன் ” என அவர் பதிலளித்தது, எதையும் மறைப்பதற்காகவல்ல; தான் தனது திருமணத்துக்காகச் செல்வது நிச்சயமாக குதைலாவுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என அவர் நம்பினார். “ இங்கேயே இப்போதே என்னை உமது மனைவியாக ஏற்றுக்கொள்ளும்: உமக்குப் பதிலாகப் பலியிடப்பட்ட அளவு ஒட்டகங்களை நீர் பெற்றுக் கொள்ளலாம். ” என்றார் குதைலா. அப்த்-அல்லாஹ் கூறினார்: “ நான் எனது தந்தையாருடன் இருக்கிறேன். அவருடைய விருப்பத்துக்கு மாறாக நான் எதையும் செய்ய முடியாது. அவரை விட்டுச் செல்லவும் முடியாது. ” (- இப்னு இஸ்ஹாக் 100)

திட்டமிட்டபடி திருமணங்கள் நடந்தேறின. இரு தம்பதியரும் வுஹைபின் வீட்டிலேயே சில தினங்கள் தங்கியிருந்தனர். பின்னர் ஒரு நாள் அப்த்-அல்லாஹ் தனது பொருட்கள் சிலவற்றைக் கொண்டு வரவென தனது வீடு நோக்கி வரும் வழியில் குதைலாவைச் சந்திக்க நேர்ந்தது. இப்போதும் தனது முகத்தைக் குதைலா ஆழ்ந்து நோக்கவே, அவர் உரையாடுவார் என எதிர்ப்பார்த்துச் சற்றே நின்றார் அப்த்-அல்லாஹ். அமைதியே நிலவிய நிலையில், முன்னைய தினம் கூறியவற்றை அவர் ஏன் இன்றைய தினமும் கூறவில்லை என வினவினார். 

குதைலா கூறினார்: “முன்னைய தினம் உம்மிடமிருந்த ஒளி நீங்கிவிட்டது. உம்மிடம் எனக்கிருந்த தேவையை இன்று உம்மால் நிறைவேற்ற முடியாது.”(-இப்னு இஸ்ஹாக் 101)

இத்திருமணங்களின் ஆண்டு கி.பி.569 ஆகும். இதனை அடுத்த வருடம் பண்டு தொட்டு யானை வருடம் என்றே வழங்கி வருகின்றது. அதன் முக்கியத்துவத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களிருக்கின்றன.



இன்னும் வரும்…

- இறைவன் நாடினால்

No comments:

Post a Comment