Pages

Tuesday, 23 October 2018

தூங்காத போழுதில்

இரவு இன்னும் மீதம் இருந்தது தூக்கம் தொலைந்து போனது

கனவுகள் விரைந்து கொண்டு இருந்தன இரவின்
இரகசியங்களைச் சுமந்து கொண்டு எல்லாவற்றையும்
மறைத்து அணைந்து போகும் விளக்குகள் இன்னும் மின்னிக்கொண்டிருந்தன

பொழுதை கட்டி இழுத்து வரப்போனவன்
கனவில் துயில்கொண்டேன் ; - எனினும்

விழிப்பு நினைவுகளை தின்று கொண்டிருந்தன

கற்பனைகள் இராட்சத்தனமாய்
பயமுறித்தின

நிமிடங்கள் யுகமாய் கடந்தன

திசையெங்கும் ஒளிப்பிறபாகம்
பரவிய போது உறங்கிப்போனேன்

                    --கயஸ்

Wednesday, 17 October 2018

அறிஞர்களின்தேவை - காலத்தின்கட்டாயம் (03)

அரபி மதரஸாக்களில் தேவையற்ற காலத்துக்கு ஒவ்வாத
பாடங்கள் கற்பிக்கப் படுவதாக பொதுவில் ஒரு பேச்சுண்டு
.
காலத்தோடு சேர்ந்து மாறுதலோடு பயணிப்பதுதான் கல்வி.
காலமாற்றங்களுக்கு ஏற்ப புதுப்புதுக் கருத்துகளோடு மிளிர்கின்றது
இஸ்லாமியக் கல்வியும்
.
எழுத்தாளர் ரஹ்மத் ராஜகுமாரன் எழுதிய கட்டுரை ஒன்றை கீழே தந்துள்ளேன்
அதைக் கண்ணுற்றால் ‘அங்கு’ என்னவெல்லாம் கற்பிக்கின்றார்கள் என்பது ஓரளவு விளங்கும்
.
இப்பாடங்கள் யாவும் இன்றும் வீரியத்தோடு கற்பிக்கப்படுகின்றனவா? என்பதை பிறகு அடுத்த பதிவில் பார்ப்போம்
.
அரபி மதரஸாக்களா ?
அறிவியல் கல்லூரிகளா ?
நம் அரபி மதரஸாக்களில் போதிக்கப்படும் பாட திட்டங்களின்சுருக்கமான ஓர் அட்டவணையை உங்களுக்கு சொல்றேன் .
1 ) தஃப்ஸீர் - குர் ஆன் விளக்கவுரை - (Commentary .)
.
2) ஹதீஸ் - நபிமொழி - (Tradition)
.
3) பிக்ஹ் ஃபராயிள் - சட்டத்துறை _(Mon Law and Jurisprudence ) பாகப்பிரிவினை .
.
4 ) உஸூலுல் ஹதீஸ் _ நபி மொழி ஆதாரங்கள் - ( principles of Hadith ) -
.
5) உஸுலுல் ஃ பிக்ஹ் - சட்டத்துறை ஆதாரங்கள் கோர்ப்பு (principles of mon Law and Jurisprudence.)
.
6) தஸவ்வுஃப் - ஆத்ம ஞானக்கலை (Biography )
.
7) தாரீக் - சாத்திரம் (Rhetoric )
.
8) சீரத் - இதிகாசம் -(History)
.
9) மஆனீ - அணியிலக்கணம் .(mythology )
.
10 ) மன்தீக் - ( Logic ) பேச்சுக்கலை (oratory)
.
II ) முனாளரா - தர்க்க சாஸ்திரம் - (logic)
.
12) அகாயித் - மத நம்பிக்கைகள் (Diseussion)
கொள்கை (Dogma)
.
13) ஹிக்மத் - தத்துவக் கலை (Geometry Astronomy )
.
14) அதப் - இலக்கியம் (prosody )
.
15) ஹன்தஸா - வரைபடக் கணிதம்
.
16) ஹை அத் - வான சாஸ்திரம் (syntax )
.
17) அருழ் . சர்ப் , நஹ்வு - யாப்பிலக்கணம் , சொல்லிணக்கணம் (Etymology ). சொற்புணரிலக்கணம்
.
20) ஹிஸாப் -கணிதம் (mathematics )
.
21) இன்ஷஃ _ அரபி மொழி தேர்ச்சி (composition and Essay writing )
.
22) கிராஅத் - திருமறை திருத்தமாக ஓதுதல்
( Recitation)
.
23) தொண்ம இயல் (mythology )
.
இது போன்ற இன்னும் பல கலைகளும் அரபி மதரஸாக்களில் கற்பிக்கப்பட்டு பல்கலைக்கழகமாகவே விளங்குகிறது .
.
ரஹ்மத் ராஜகுமாரன்
.
Rahmath Rajakumaran

Tuesday, 16 October 2018

அறிஞர்களின்தேவை -காலத்தின்கட்டாயம் (02)

Abdurrahman Umari

அறிஞர்கள் தேவை என நாம் சொல்லிக் கொண்டுள்ளோம்
அறிஞர்கள் தமது முழுப்பொருளின் பொறுப்புணர்ந்து
செயல்படுகின்றார்களா?
தமக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்கின்றார்களா?
வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றுள்ளனரா?
.
என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்கவேண்டும்
அவற்றில் சில கோணங்களைப் பற்றி பேசவே
இக்கட்டுரை
.
ஆலிம்கள் என்னும் பெயரில் உள்ளோர் எப்படியெல்லாம்
வருமானம் ஈட்டலாம்? என்பதற்கு பலருமின்று கருத்துகளை பகிர்கிறார்கள்
.
வருமானம் ஈட்டுவதே குறிக்கோளென்றால் ஆலிம் பயில்வானேன்?
அறிவைக் கற்று அதன்வழி சமூகத்தை நடத்திச்செல்வதே அறிஞர்தம்
பணி, அவராற்றும் சமூகக்கடமை
.
மளிகைக்கடை வைத்தோ பார்ட் டைம் ஜாப் பார்த்தோ வருமானம் ஈட்ட
அவர் ஏன் அறிவைக் கற்கவேண்டும்
.
அதற்குரிய தொழிற்திறன் பயிற்சிகளைப் பெற்றால் போதாதா?
.
இன்று ஆலிம்கள் சந்திக்கின்ற பிரச்சனைகள், எதிர்கொள்ள இயலாமல் தத்தளிக்கின்ற சிக்கல்களுக்காக காரணங்களும் தீர்வுகளும் வேறு
.
உண்மையில் அவற்றைப் பற்றி பேச இன்று யாரும் தயாராக இல்லை
அறிந்தோர் அவற்றை அடைய முயன்றால் எட்டிவிடுவோர் போன்றோர்
ஏனோ இவைகுறித்து பேசாமல் மௌனம் காக்கின்றார்கள்
.
இல்ம் என்பது இமாமத் பணியை நிறைவேற்ற
.
இமாமத் என்பது ஒரு வேலை, பணி அல்ல. அது பொறுப்பு
.
சமூகத்தின் இமாமாக இருந்தாலும் சரி, மொஹல்லாவின் இமாமாக இருந்தாலும் சரி, அது முதுகை அழுத்தும் பாரம். முடியாச்சுமை
.
அது முடியாமல் தவிப்போர் உண்மையிலேயே பாராட்டிற்கும் போற்றுதலுக்கும் உரியோர். ஆற்றலும் வல்லமையும் மிக்க இறைவன் அவர்களுக்காக வானுலகிலிருந்து உதவியாளர்களை அனுப்பும் அளவு தகைமை உடையோர்
.
இன்று நிலைமை இதுவன்று. இதற்கு நேர் எதிர்
.
பள்ளி நிர்வாகிகளிடம் மதிப்பில்லை, மொஹல்லா மக்களிடம் மரியாதையில்லை,
வாழ்க்கைக்கு தேவையான போதிய வருமானம் ஈட்ட வழியில்லை
அவ்வளவு ஏன், மக்தப் மதரஸா மாணவர்களிடம் கூட எடுபடுவதில்லை
.
இதற்கெல்லாம் காரணம் அவர்களுடைய ஆளுமைத்திறனில் இருக்கின்றது
அவ்வாளுமைத்திறனை உருவாக்கும் பாடசாலைகளில் இருக்கின்றது
.
ஏட்டுக்கல்வியை (கற்றோரை அல்ல) மனனமிட்டோரையை பாடசாலைகள் உருவாக்குகின்றன.
உம்மத்திற்கு தலைமையேற்க வல்ல, ஒரு மொஹல்லாவை திறம்பட நடத்திச்செல்ல வல்ல, இமாம்களை அதாவது தலைவர்களை மதரஸாக்கள் உருவாக்குவதே கிடையாது
.
இஸ்லாமிய பாடசாலைகளின் குறியிலக்காக இது இல்லவே இல்லை

அறிஞர்களின் தேவை - காலத்தின் கட்டாயம் (01)


Abdurrahman Umari
.
இல்ம் என்றால் என்ன?
ஒரு பொருளை, ஒரு கருத்தை, ஒரு விஷயத்தை உள்ளது உள்ளவாறு கற்றோ உணர்ந்தோ அதன் மெய்யியல்பை அறிவது ‘இல்ம்’ எனப்படுகின்றது
.
அவ்வகையில் இஸ்லாமிய நன்னெறியை இயன்றளவு (ஆம், இயன்றளவு) கற்றறிந்து, இந்நன்னெறியின் முழுமூலமான பேரருளாளனோடு நெருங்கிய தொடர்பை அரும்பாடுபட்டுப் பெற்று, சிந்தையிலும் உள்ளத்திலும் ஈமானியப் பேரொளியை நிரப்பிக்கொள்ளும் நற்செயலில் அயராது ஈடுபட்டு, அதன் பிரதிபலிப்பாய் தம் புறச்செயல்களை சீராக்கிக் கொள்ளும் மேன்மரபினரே இஸ்லாமியப் பெருவழக்கில் ‘ஆலிம்’ என்றுரைக்கப்படுவர்
.
இத்தகைய சீர்மிகு உலமாக்களின் பணி முன்மாதிரி இஸ்லாமிய உம்மத்தை உருவாக்குவதிலும் முழுமையானதோர் அழைப்பியல் சமூகமான அதனைப் பரிணமிக்கச் செய்வதிலும் பெரும் பங்காற்றுகின்றது
.
முன்னெப்போதையும் விட மிகுதியாக இக்காலத்தில் சான்றோர்களாக தம்மை வார்ப்படுத்திக் கொள்ளும் சீர்மிகு உலமாக்களின் தேவை இன்றைய உம்மத்திற்கு குறிப்பாக தமிழக முஸ்லிம் சமூகத்திற்கு உள்ளது என்றெண்ணுகின்றேன்
.
ஆற்றலும் யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய அல்லாஹ்வால் தேர்வாகி அறிவமுதம் வழங்கப்பட்ட அறிஞர் பெருந்தகைகள் ஒவ்வொருவராக உலகுபிரிந்து செல்லும்போதும் இக்கவலை மிகுந்து இருளாய் உள்ளத்தை கவ்வுகின்றது
.
இவ்வழியாகத்தான் அறிவு அகற்றப்படும் என இறுதித்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களும் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்கள்
.
அறிவைப் போற்றுவதற்காக அல்ல, அறிவை பாதுகாத்து உம்மத்திற்கு உரிய முறையில் ஊட்டி, உய்வடையச் செய்து தன் முழுப்பொருளில் ஓர் இஸ்லாமிய உம்மத்தாக - முற்றிலும் அடிபணிந்தும் அவ்வடிபணிதலை நோக்கி உலக மாந்தரை அழைத்தும் தான் தோன்றிய கடமையை - சிறப்புமிகு உம்மத்தாக நிறைவேற்ற வல்ல ஓர் உம்மத்தாக உருவாக்க அறிவுமரபினர் தேவை எனும் இக்கவலை எத்தனை பேர் உள்ளத்தில் நீங்காதுநிறைந்து துயில்மறந்து இறைவனிடம் மன்றாட வைத்துக்கொண்டுள்ளது என்பதை நானறியேன்
.
ஆங்காங்கே அங்கொன்றும் இங்கொன்றுமாய் செய்யத்தக்கதன்று, இப்பணி!!. ஒவ்வொரு மொஹல்லாவிலும் தவறாமல் செய்தேயாக வேண்டிய திருப்பணி இது
.
அறிவுக்கலைகளும் தெளிஞானமும் மார்க்கப் புலமையும் வான்மறை மற்றும் வழிகாட்டும் நபிமொழிகளின் நுண்ணறிவும் சிறுகச்சிறுக சன்னம் சன்னமாக மறைந்து கொண்டுள்ளது என்பதை ஈமானிய கண்ணோட்டத்தோடு உம்மத்தை உற்றுநோக்குகின்ற ஒவ்வொருவராலும் அறியமுடிகின்றது
.
என்னதான் இதற்கு தீர்வு? இந்த உம்மத் இப்படியே கவனிப்பாரற்று கீழ்நிலையில் - சிரஞ்சீவி மூலிகைகள் கைக்கொண்டவாறே - மடிந்து போகவேண்டுமா?
.
வானுயர எழுகின்ற சுனாமிப் பெருங்காற்றால் சூறையாடப்பட்டு இப்பெரும் கலம் அழிந்தே போகும் என்றே விதியிருந்தபோதிலும் கடைசி மூச்சை நிறுத்தும் வரை இழுத்துப்பிடித்து காப்பாற்றும் பணியில் இறங்கக்கூடாதா?
.
உலமாக்களால் மட்டுமே இந்த உம்மத் சீர்பெறும் சிறப்படையும் என வான்மறை ஆய்வாளரான இமாம் ஹமீதுத்தீன் ஃபராஹி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுவார்கள்
.
கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டது போன்று தமது பெயருக்கேற்ப உண்மையிலேயே அறிஞர்களாக திகழும் பெருமான்கள் பலரை நானறிவேன்
.
அவர்களின் உள்ளத்திலுமா இல்லாமற் போயிற்று இக்கவலை? என்றொரு ஏக்கத்தையே எடுத்துரைக்கின்றேன்
.
வல்லதீன ஜாஹதூ ஃபீனா லநஹ்தியன்னஹும் ஸுபுலனா - என்பது திருமறை அருள்வாக்கு அல்லவா? வாக்கல்ல அது, உத்தரவாதம்!
.
நம் கண்முன்னால் ஏன் இக்கலம் மூழ்கவேண்டும்? சாகும்வரை மூழ்காது காப்பாற்ற முயற்சிப்போமே? செத்தபிறகு ஏதாவது ஆனாலும் நாம் அறியமாட்டோம், அல்லவா?
.
குறைந்தபட்சம் விசாரணைக் கொடுநாளில் தயங்கி தயங்கி சொல்வதற்காவது நம்மிடம் சாக்கொன்று இருக்குமில்லையா?
.
(தொடரும்)

Sunday, 14 October 2018

தக்வா எனும் ஆடை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

இன்று வழக்கமாக ஓதும் போது இரண்டு வசனத் தொடர் கண்கல்ங்கச் செய்தது. அல்லாஹ் நம்மைக் காக்க வேண்டும்.

நாம் நன்றி செலுத்துவது குறைவு என்று முதல் பத்து வசனங்களில் சொல்லிவிட்டு அது நமது தந்தை ஆதம் (அலை) அவர்கள் காலத்திலிருந்து இருக்கிறது என்கிறான்,

ஆதமைப் படைத்து வானவர்களைச் சிரம் பணியுங்கள் என்று கட்டளையிட்ட போது; இப்லீஸைத் தவிர என்று ஆரம்பித்து இப்லீஸ் இறைவனிடம் உறையாடி வாசகம் தொடர்கிறது அடுத்த 5 வசனங்களில்.. இறுதியில் இறைவன் அவகாசம் அளிக்கப்பட்டதாகச் சொல்கிறான்.

அத்தியாயம் 7 : குகைவாசிகள்

வசனம் 15

அதற்கு “நீ அவகாசம் அளிக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய்!” என்று அல்லாஹ் கூறினான்.

قَالَ اِنَّكَ مِنَ الْمُنْظَرِيْنَ‏ 

இந்த அவகாசம் இப்லீஸுக்கு மட்டும்தானா அல்லது மனித இனத்திற்கும் தான்.  இதோ இந்த உலக வாழ்க்கையில் நம்முடைய நடைமுறைகளை நாம் தனித்திருந்து சிந்திப்போமானால் அத்தனை தவறுகளும் கண் முன்னால் வந்து செல்லும். எவ்வளவு நன்றி கொன்றவர்களாக நாம் வாழ்கிறோம் என்று புரியும்.

இந்த வசனத்திலிருந்து தொடர்ந்து கனக்கும் எமது இதயம் இறைவன் மன்னிப்பளித்தாக கூறும் 23 வசனம் வரை மீண்டும் மீண்டும் வாசிக்கச் சொல்லியது.  ஒரு சம்பவம் அத்தனை அழகாக வேறு எந்த ஒரு சொல்லாடலால் இவ்வளவு எளிமையாக நம்மை உருகச் செய்யுமா என்று கண் குத்தி மீள்கிறேன்.

வசனம் 23

“எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே அக்கிரமம் செய்துகொண்டோம். எங்களை நீ மன்னித்து எங்களுக்குக் கிருபை செய்யாவிடில், நிச்சயமாக நாங்கள் இழப்பிற்குரியவர்களாகி விடுவோம்.”

 رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا ٚ وَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَا وَتَرْحَمْنَا لَـنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ‏ 


இறைவா! எனக்கே நான் அதிகமான அநீதிகளைச் செய்து விட்டேன். உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே உன் புறத்திலிருந்து எனக்கு மன்னிப்பு வழங்கு. எனக்கு அருள் புரிவாயாக. நீயே மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையவன்

மன்னித்த இறைவன் அடுத்த வசனத்தில் மிகப் பெரிய சங்கதியைத் தருகிறான்.  நாம் உண்மையிலேயே ஒருவருக்கு ஒருவர் பகைவர் ஆவோம் என்பது தான்; 

 عَدُوٌّ‌

எதற்காக நாம் பகைத்துக் கொள்ள வேண்டும் என்று தெளியாமலே இன்னும் வாதிடுகிறோம்.  இறைவன் தொடர்ந்து சொல்லும் போது  உங்களின் உடலுக்குப் பாதுகாப்பகவும் அலங்காரமாகவும் ஆடையைத் தந்துள்ளதாகக் கூறிவிட்டு  தக்வா எனும் இறையச்சம் தான் சிறந்த ஆடை என்கிறான்.

لِبَاسُ التَّقْوٰى ۙ ذٰ لِكَ خَيْرٌ‌

ஆதத்தின் மக்களே! எவ்வாறு ஷைத்தான் உங்கள் தாய் தந்தையரை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றினானோ, மேலும் அவர்களுடைய வெட்கத்தலங்களை பரஸ்பரம் வெளிப்படுத்திட வேண்டும் என்பதற்காக அவர்களுடைய ஆடைகளைக் களைந்தானோ அவ்வாறு மீண்டும் உங்களை அவன் குழப்பத்திலாழ்த்திட வேண்டாம். நீங்கள் பார்க்க முடியாத இடத்திலிருந்து அவனும், அவனுடைய நண்பர்களும் உங்களைப் பார்க்கின்றார்கள். திண்ணமாக, இறைநம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு இந்த ஷைத்தான்களை நண்பர்களாய் நாம் ஆக்கியுள்ளோம்.

இறைவனின் கட்டளைகளில் நமக்கு சஞ்சலங்களை ஏற்படுத்தி நமது ஆடைகளைக் களைந்து நமது இவ்வுலக நிலையையும்  மறுமையிலும் தோல்வி பெறச் செய்வதுதான். நாம் தான் கவனமாக இருக்கவேண்டும்.

இறைவா! உள்ளங்களைத் திருப்புபவனே! எங்கள் உள்ளங்களை உனது வழிபாட்டின் பால் திருப்புவாயாக.

இவ்வாறு தொடரும் இந்த வசனம் மிகப் பெரும் தொடர் நிகழ்வாக வசனம்  43 ல் சுவனவாசிகளிடம் அந்த பகைவராவீர்கள் என்பதினை  தெளிவு படுத்துகிறான்.

وَنَزَعْنَا مَا فِىْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ

மேலும், அவர்களின் நெஞ்சங்களில் (ஒருவர் மீது மற்றவருக்கு) இருந்த காழ்ப்புணர்வை நாம் போக்கி விடுவோம்.

 இந்தக் காழ்ப்புணர்வு நம்மிடையே இருந்தாலும் அதை பொறுத்துக் கொள்ளுதல் சகிப்புத்தன்மையுடன் இறைவன் ஏற்பாடு என்றிருந்தால் நமக்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றிதான்.
அதை அந்த சுவனவாசிகள் இவ்வாறு சொல்வார்கள்.

“எங்களுக்கு இவ்வழியினைக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

தொடர்ந்து  50, 51 வசனத்தில் ஒரு முறை இதயம் உலுக்கியது மீண்டும் மீண்டும் வசனத்தினை வாசிக்கிறேன். 


மேலும், நரகவாசிகள் சுவனவாசிகளை அழைத்துக் கேட்பார்கள்: “எங்கள் மீது சிறிது தண்ணீரை ஊற்றுங்கள்; அல்லது அல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து சிறிதளவு கொடுங்கள்.” அதற்கு அவர்கள் பதில் அளிப்பார்கள்: “திண்ணமாக, அல்லாஹ் இவ்விரண்டையும் சத்தியத்தை மறுத்தவர்களுக்குத் தடைசெய்து விட்டான்.”

இவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கிவிட்டதனால் தங்களுடைய மார்க்கத்தை வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்நாளில் (நம்மைச்) சந்திப்பதையும் மறந்தவாறே நாமும் இன்றைய தினம் அவர்களை மறந்துவிடுவோம்.


யா அல்லாஹ் நான் உனது கருணையை எதிர்பார்க்கிறேன் கண் இமைக்கும் நேரத்திற்கு கூட நீ என்னை (உன் பொறுப்பிலிருந்து என் பொறுப்பில் விட்டு விடாதே! என் விவகாரங்கள் அனைத்தையும் எனக்காக நீ சீர்படுத்துவாயாக! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர யாருமில்லை.

வணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர வேறு யாருமில்லை நீ தூய்மையானவன்! நிச்சயமாக நான் அநியாகாரர்களில் ஒருவனாக ஆகிவிட்டேன்.


இறைவா! உனது அருள் நீங்குவதை விட்டும், உனது நன்மை மாறி விடுவதை விட்டும், உனது தண்டனை திடீரென வருவதை விட்டும், உனது அனைத்து கோபத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.



Monday, 8 October 2018

சூரா முல்க் - கிரா அத் ஷெய்க் ஹானி அல் ரிபாயி.

இன்னமும் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டிய வசனங்கள் எவ்வளவு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் வசனங்களைப் பார்த்து மொழியாக்கங்களை உள்வாங்கியே வாசிக்கிறேன்.


இது போன்ற கனமான விசும்பலில் இன்னும் பல அர்த்தங்கள் விளங்குகிறது. நம்மை மீண்டும் ஒரு முறை கலங்கச் செய்கிறது.


வசனம் எண் 4 :

பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார்; உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும்.

இந்த வசனத்தின் மொழியக்கம் கேட்ட நினைவுகள் இருபது ஆண்டு பழைய செய்தியை நினைவூட்டியது.

இறைவா! என் உள்ளத்தில் ஒளியை ஏற்படுத்து! எனது பார்வையிலும், எனது செவியிலும், என் வலது புறமும், இடது புறமும், எனக்கு மேலேயும், எனக்குக் கீழேயும், எனக்கு முன் புறமும், எனக்குப் பின்புறமும் ஒளியை ஏற்படுத்து! எனக்கு முழுமையாக ஒளியை ஏற்படுத்து!

வசனம் 7 இறுதி வார்த்தைகள்
அது கோபத்தால் வெடித்து விடுவதைப் போல் குமுறிக் கொண்டிருக்கும்.

அல்லாஹும்ம அஜிர்னி மினன் நார் -  இறைவா! நரக நெருப்பிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக!


வசனம் 11

தங்கள் பாவத்தை ஒப்புக்கொள்வார்கள். ஆகவே, இந்நரகவாசிகளுக்குக் கேடுதான்.


வசனம் 16

வானத்தில் இருப்பவன், உங்களைப் பூமியில் சொருகிவிட மாட்டான் என்று நீங்கள் அச்சமற்றிருக்கின்றீர்களா?

நில-நடுக்கங்களும் ஆழிப்பேரலைகளும் நமக்கு மிகவும் பரிச்சயமில்லாதவை ஆனால் இந்த வசனம் அவ்வப்போது நடக்கும் நிலநடுக்கங்களைவிட நம்மை உலுக்குவதில் ஆன்மா ஆட்டம் காண்கிறது.



சூரா அல் முல்க் - ஷெய்க் ஹானி அல் ரிபாயி