Friday, 4 August 2023

உதுமான் பின் அஃப்பான் (ரலி) வாழ்க்கை வரலாறு

 4. ஆட்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுதல்


உமர் (ரலி) அவர்கள் தனக்குப் பின் வரக் கூடிய ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆறு பேர் கொண்ட குழுவை சிபாரிசு செய்திருந்ததோடு, இவர்கள் ஆலோசனை செய்து தங்களுக்குள் ஒருவரை ஆட்சியாளராகத் தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்றும் அவரது உயிலில் எழுதி இருந்தார்கள்.

உமர் (ரலி) அவர்களால் சிபாரிசு செய்யப்பட்டவர்கள் :

        அலி (ரலி)

        உதுமான் (ரலி)

        அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)

        சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி)

        ஜுபைர் பின் அவ்வாம் (ரலி)

        தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி)

உமர் (ரலி) அவர்கள் மரணமடைந்த மூன்று நாட்களுக்குள் இவர்கள் கலந்தாலோசனை செய்து கலீபாவைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என அதில் நிபந்தனையும் விதித்திருந்தார்கள் உமர் (ரலி) அவர்கள்.

இவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர்கள் தமது கலீபாவைத் தேர்ந்தெடுக்க அமர்ந்த பொழுது, தல்ஹா (ரலி) அவர்கள் மதீனாவில் இல்லை, அவர் வெளியூரில் இருந்தார். எனவே, அவரால் இந்த ஆலோசனையில் கலந்து கொள்ள இயலவில்லை. இந்த ஆலோசனைக் குழு மிக நீண்ட நேர விவாதத்திற்குப் பின்னும் சரியானதொரு ஒருமித்த முடிவுக்க வர இயலவில்லை. எனவே, அங்கு குழப்பம் நீடித்தது. இந்த நிலையில், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் ஒரு கருத்தை முன் வைக்கின்றார்கள்.

நம்மில் யாராவது ஒருவர் இந்த நியமன உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொண்டால், அவ்வாறு விலகிக் கொள்ளக் கூடிய நபருக்கு கலீபாவை முன் மொழியக் கூடிய உரிமையை அளிப்பது என்று கூறி, யார் நம்மில் நியமன உறுப்பினர் குழுவில் இருந்து விலகிக் கொள்ள சம்மதிப்பது? என்று கேட்டார். அனைவரும் நிசப்தமாக இருந்தர். பின் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், நான் விலகிக் கொள்கின்றேன் என்று கூறினார்.

அலீ (ரலி) அவர்களைத் தவிர மற்ற அனைவரும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுடைய முடிவை ஏற்றுக் கொண்டார்கள். அப்பொழுது, அலீ (ரலி) அவர்களைப் பார்த்து, நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் கேட்டார்கள்.

        வாக்குறுதி நீதமாக இருக்க வேண்டும்.

        இரத்த உறவு முறைகளுக்காக வாக்குறுதிகள் மீறப்படக் கூடாது.

        பொதுமக்களின் நலனை முன்னிட்டு, வாக்குறுதிகள் பேணப்பட வேண்டும்.

மேற்கண்ட அனைத்து விதிமுறைகளையும் ஒப்புக் கொள்ளும்பட்சத்தில், நானும் உங்களது முடிவுக்கு சம்மதிக்கின்றேன் என்று அலீ (ரலி) அவர்கள் பதில் கூறினார்கள்.

அலீ (ரலி) அவர்களின் நிபந்தனைகளை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இப்பொழுது ஒட்டு மொத்த முஸ்லிம்களும் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களின் முடிவு எவ்வாறு அமையப் போகின்றது, யாரைத் தேர்ந்தெடுக்கப் போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்போடு மக்கள் காத்திருக்க ஆரம்பித்தார்கள். அனைத்தும் இப்பொழுது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களின் முடிவில் இருக்கின்றது.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள், இந்த கடுமையான பணியைச் சிரமேற் கொண்டு, எடுத்துக் கொண்ட பொறுப்பை நிறைவேற்றுவதற்காக கடுமையாகப் பாடுபட்டார்கள். உமர் (ரலி) அவர்களின் மரணத்தை அடுத்து, முஸ்லிம் ராஜ்யத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் அடுத்து யார் நமது கலீஃபா என்ற எதிர்பார்ப்போடு இருந்தார்கள். இன்னும் அனைத்துத் தலைவர்களும் கருத்தில் கொள்ளப்பட்டு தேர்வு ஆரம்பமாகியது.

இப்பொழுது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள், தனிப்பட்ட ஒவ்வொருவரிடமும் சென்று மிக நீண்ட நேர ஆலோசனைகளை நடத்தினார். பனூ ஹாஷிம் குலத்தவர்கள் அலீ (ரலி) அவர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று கூறினார்கள், இவர்களைத் தவிர மற்ற அனைவரும் உதுமான் (ரலி) அவர்களை நியமனம் செய்யுமாறு கூறினார்கள். எனவே, இப்பொழுது வேட்பாளர் குழுவில் மற்ற தலைவர்கள் அனைவரது பெயர்களும் களையப்பட்டு, உதுமான் (ரலி) மற்றும் அலீ (ரலி) ஆகிய இருவரது பெயர்களும் இறுதித் தேர்வுக்கு முன் மொழியப்பட்டன.

இப்பொழுது, இறுதித் தேர்வுக்காக அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் களமிறங்கினார்கள்.

உங்களை அடுத்து, யார் இந்த கலீபா பொறுப்புக்கு மிகவும் தகுதி வாய்ந்த நபராக நீங்கள் கருதுகின்றீர்கள் என்று அலீ (ரலி) அவர்களைப் பார்த்து அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கேட்டார்கள்.

உதுமான் (ரலி) என்று பதிலளித்தார்கள் அலீ (ரலி) அவர்கள்.

இதே கேள்வியை உதுமான் (ரலி) அவர்களிடம் சென்று கேட்ட பொழுது, அவர்கள் அலீ (ரலி) என்று பதிலளித்தார்கள்.

அன்று இரவும் வந்தது. மறுநாள் அதிகாலையில் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் ஒரு இறுதி முடிவுக்கு வந்தார்கள். இரவு முழுவதும் உட்கர்ந்து, மற்ற நான்கு நியமன உறுப்பினர்களிடமும் கலந்தாலோசனை செய்தார்கள். இறுதியாக, தனது இறுதி ஏகமனதான முடிவை நியமன உறுப்பினர்களிடம் கொண்டு வருவதில் தோல்வியைக் கண்டார்கள். பனூ ஹாஷிம் மற்றும் பனூ உமைய்யா குலத்தவர்களுக்கிடையேயான வேறுபாடுகள் தலைதூக்க, ஏகமனதான முடிவுக்கு வர இயலாமல் போனது. இறுதியாக அதிகாலை பஜ்ர் தொழுகைக்கான அதான் கூறப்பட்டதுடன், அந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.

தொழுகையும் முடிந்தது, இப்பொழுது முழு மதீனா நகரமுமே தனது கண்களையும், காதுகளையும் கூர்தீட்டிக் கொண்டு, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் என்ன கூறப் போகின்றாரோ என்ற ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்தது.

அப்துர் ரஹ்மான் இப்பொழுது எழுந்து நின்றார். சில நிமிட நேரங்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு, தனக்கு நேர்வழி காட்டுமாறு பிரார்த்தனையும் செய்தார். பின் மக்களைப் பார்த்து,

எனதருமைச் சகோதரர்களே..!

மிகச் சிறந்த முடிவொன்றை இப்பொழுது உங்கள் முன் அறிவிக்க இருக்கின்றேன். நான் பல பேர்களிடம் இது குறித்துக் கருத்துக் கேட்டு விட்டுத் தான் இறுதி முடிவுக்கு வந்துள்ளேன். எனது முடிவில் நீங்கள் மாறுபட மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.

பின் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃபான் (ரலி) அவர்கள் உதுமான் (ரலி) அவர்களை அழைத்தார்கள். ''நீங்கள் குர்ஆனின் கட்டளைப்படியும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைப்படியும், நேர்வழி பெற்ற முந்தைய கலீபாக்களின் நெறிமுறைப்படியும் ஆட்சி நடத்துவேன்””, என்ற உறுதி மொழியைத் தாருங்கள், என்று கேட்டார்கள்.

என்னால் இயன்ற வரையிலும், என்னுடைய மிகச் சிறந்த கல்வி ஞானத்தாலும் என்னுடைய வாக்குறுதியைப் பேண முயற்சி செய்வேன், என்று உறுதி கூறினார்கள் உதுமான் (ரலி) அவர்கள். அதனை அடுத்து அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் உதுமான் (ரலி) அவர்களின் கரங்களில் பைஅத் என்ற சத்தியப்பிராமணம் செய்தார்கள். இவ்வாறாக, உதுமான் (ரலி) அவர்கள் மூன்றாம் கலீபாவாகத் தேர்வு செய்யப்பட்டார்கள்.


உதுமான் பின் அஃப்பான் (ரலி) வாழ்க்கை வரலாறு

 3. இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நெருக்கம்


இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் மிக நெருக்கமாக இருந்த நபித்தோழர்களில் உதுமான் (ரலி) அவர்களும் ஒருவராவார். இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ருப் போர் தவிர மற்ற அனைத்துப் போர்களிலும் கலந்து கொண்டார்கள். உதுமான் (ரலி) அவர்களின் மனைவியும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மகளுமான ருக்கையா (ரலி) அவர்கள் சுகவீனமாக இருந்த காரணத்தால், பத்ருப் போருக்கு வர வேண்டாம் என்றும், அவர்களை இருந்து கவனித்துக் கொள்ளுமாறும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதால், பத்ருப் போரில் உதுமான் (ரலி) அவர்கள் கலந்து இயலாமல் போய் விட்டது. சுகவீனத்தில் இருந்த மீள முடியாது போகவே, ருக்கையா (ரலி) அவர்கள் மரணமடைந்தார்கள். தனது மனைவியின் பிரிவால் உதுமான் (ரலி) அவர்கள் மிகவும் சோகமாகவும், வேதனையின் உச்சத்திலும் இருந்தார்கள். மனைவியை இழந்தது போக, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மருமகன் என்ற அந்தஸ்தும் பறிபோய் விட்டதே என்றும் உதுமான் (ரலி) அவர்கள் மிகவும் கவலை அடைந்தார்கள். உதுமான் (ரலி) அவர்களின் சோகத்தைக் கண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தனது இன்னொரு மகளான உம்மு குல்தூம் (ரலி) அவர்களை இரண்டாம் தாரமாக உதுமான் (ரலி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். இதன் காரணமாக, ''துன்னூரைன் - இரு ஒளி விளக்குகளைப் பெற்றுக் கொண்டவர்”” என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.

ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு நடந்த ஹுதைப்பிய்யா உடன்படிக்கையின் பொழுது, அதன் அமைதி நடவடிக்கைகளில் சிறப்புப் பங்காற்றிய பெருமைக்குரியவர் உதுமான் (ரலி) ஆவார்கள். அமைதிப் பேச்சுவார்த்தைக்காக உதுமான் (ரலி) அவர்களைத் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குறைஷிகளிடம் அனுப்பி வைத்தார்கள். ஆனால் குறைஷிகளோ..!

உதுமான் அவர்களே..! நீங்கள் வேண்டுமானால் கஃபாவைத் தரிசித்து விட்டுச் செல்லுங்கள், உங்களது இறைத்தூதரை நாங்கள் மக்காவிற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்கள்.

உதுமான் (ரலி) கூறினார்கள் :

இது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று. முஹம்மது (ஸல்) அவர்களால் இறைவனது ஆலயத்தை தரிசிக்க முடியாது போனால், என்னாலும் அது முடியாது என்று கூறி விட்டார்கள். உதுமான் (ரலி) அவர்களது இந்த வார்த்தை அவர்களை மிகவும் பாதித்து விட்டது, கோபங் கொள்ளச் செய்தது.

இதற்கிடையில் உதுமான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற வதந்தி காட்டுத் தீ போல கால் முளைத்து, மக்காவையும் தாண்டி இறைத்தூதர் (ஸல்) அவர்களை வந்தடைந்தது. உதுமான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற செய்தியை அறிந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கடும் கோபத்திற்கு ஆளானதோடு, நிலமையின் விபரிதத்தைப் புரிந்து கொண்ட அவர்கள், இதற்குப் பழிக்குப் பழி எடுப்பது என்று முடிவெடுத்து, எந்த சூழ்நிலையிலும் பின்வாங்க மாட்டோம், உறுதியோடு எதிரிகளைச் சந்திப்போம் என்று தனது தோழர்களிடம் பைஅத் என்ற உறுதிப் பிரமாணத்தை வாங்கிக் கொண்டார்கள். அந்த வரலாற்று நிகழ்ச்சியைத் தான் இன்றும் நாம் பைஅத்துர் ரிழ்வான் என்று போற்றி அழைக்கின்றோம். பின் அந்த வதந்தி பொய் என்று தெரிந்தது, உதுமான் (ரலி) அவர்களும் எந்தவித ஆபத்துமின்றி முஸ்லிம்களுடன் வந்து சேர்ந்து கொண்டார்கள்.

முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு வந்து சேர்ந்த பொழுது, அங்கு தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடியது. தண்ணீருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அப்பொழுது மதீனாவில் ஒரே ஒரு தண்ணீர்க் கிணறு தான் இருந்தது. அதுவும் ஒரு யூதனுக்குச் சொந்தமாக இருந்தது. அவர் முஸ்லிம்களை தண்ணீர் எடுத்துக் கொள்ள அனுமதிக்க மறுத்தார்.

எனவே, தனது தோழர்களை அழைத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ''உங்களில் யார் அந்தக் கிணற்றை வாங்குகின்றார்களோ, அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் ஒரு ஊற்றையே பரிசாக வழங்குவான்”” என்று வாக்குறுதி அளித்தார்கள். அப்பொழுது உதுமான் (ரலி) அவர்கள் தான் வாங்குவதாகப் பதிலளித்தார்கள். அதனை 20 ஆயிரம் திர்ஹம்களுக்கு வாங்கி, அதனை முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்ள தானாமாகவும் வழங்கி விட்டார்கள்.

மதினாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் முதலில் கட்டிய பள்ளிவாசல் போதாத நிலையில் இருந்தது. இதைக் கண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், பள்ளிவாசலை விரிவாக்க எண்ணியவர்களாக, உங்களில் யார் இந்தப் பள்ளிவாசலின் விரிவாக்கத்திற்காகச் செலவு செய்யத் தயாராக இருக்கின்றீர்கள் என்று கேட்டார்கள். அப்பொழுதும் உதுமான் (ரலி) அவர்கள் ''நான்”” என்று முன்வந்தார்கள். அந்தப் பள்ளிக்குப் பக்கத்தில் இருந்து நிலத்தை வாங்கி பள்ளிவாசல் விரிவாக்கப்பணிக்கு தானமாக வழங்கினார்கள்.

ஹிஜ்ரி 9 ம் ஆண்டு பைஸாந்தியப் பேரரசன் மதீனாவைத் தாக்குதவற்கு தயாராகி வருகின்றான் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அதற்குப் பதிலடி கொடுப்பதற்கு முஸ்லிம்கள் தயாராகும்படி கட்டளையிட்டு விட்டு, அதற்கான தயாரிப்புகளுக்கு பொருளாதார உதவியை வழங்கும்படி தனது தோழர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். இதனைக் கேட்ட உதுமான் (ரலி) அவர்கள், ஆயிரம் ஒட்டகங்களையும், 50 குதிரைகளையும், ஆயிரம் தங்கக் கட்டிகளையும் அந்தப் போருக்காக வழங்கினார்கள். இன்றைக்கு உதுமான் (ரலி) அவர்கள் என்ன செய்திருக்கின்றார்களோ, இன்றைய நாளிலிருந்து, அவர்களை என்றைக்கும் கெடுதிகள் அணுகாது என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இறைத்தூதை எழுதும் எழுத்தாளர்களில் ஒருவராக உதுமான் (ரலி) அவர்கள் இருந்தார்கள். திருமறைக் குர்ஆனின் ஒரு பகுதியை எழுதிய நற்பேற்றுக்குரியவரும் ஆவார். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களால், சொர்க்கத்திற்கு நன்மாராயங் கூறப்பட்ட பத்து நபித்தோழர் பெருமக்களில் உதுமான் (ரலி) அவர்களும் ஒருவராவார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் நெருக்கமாக இருந்த காரணத்தால், நபித்தோழர்களிலே மிகவும் மதிக்கப்பட்ட தோழராக உதுமான் (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்ததன் பின்பு, நேர்வழி காட்டப்பட்ட கலீபாக்களின் ஆட்சியில், அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியின் பொழுது, இரண்டு கலீபாக்களுக்கும் ஆலோசகராகவும் இருந்த பெருமைக்குரியவர் உதுமான் (ரலி) ஆவார்கள்.

உதுமான் பின் அஃப்பான் (ரலி) வாழ்க்கை வரலாறு

 2. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுதல்


உதுமான் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு அபுபக்கர் (ரலி) அவர்கள் தான் காரணமாக இருந்தார்கள். இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாவார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பனூ ஹாஷிம் குலத்தைச் சேர்ந்தவர்கள். உதுமான் (ரலி) அவர்கள் பனூ உமைய்யா குலத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு குலங்களும் மிக நீண்ட காலமாக பரம வைரிகளாக இருந்து வருபவர்கள். எனினும், இவை யாவும் உதுமான் (ரலி) அவர்கள் சத்தியத்தை ஏற்றுக் கொள்வதனின்றும் தடுத்து விடவில்லை, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஆரம்ப கால முஸ்லிம்களில் உதுமான் (ரலி) அவர்களும் ஒருவராவார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது மகளான ருக்கையா (ரலி) அவர்களை உதுமான் (ரலி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள்.

உதுமான் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் காரணமாக, அவர்களது குலத்தவர்களின் கடும் பகையைச் சம்பாதிக்க வேண்டி வந்தது. இவரது மாமாவான ஹகம், உதுமான் (ரலி) அவர்களின் கைகளையும், காலையும் கட்டிப் போட்டு வீட்டில் இருட்டுச் சிறையில் அடைத்து வைத்தார். மற்ற நபித்தோழர்களைப் போலவே உதுமான் (ரலி) அவர்களும் கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளான போதிலும், இஸ்லாத்தை விட்டு விடவில்லை. உதுமான் (ரலி) அவர்களை மிகவும் விரும்பிய அந்தக் குறைஷிகள் தான் இப்பொழுது வெறுக்க ஆரம்பித்தார்கள். அவரது சொந்தக் குலத்தவர்களே அவரைக் கைவிட்டு விட்டனர். இது அவர்களை மிகவும் பாதித்தது. இந்த நிலையில், இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அபீஸீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்து செல்ல, உதுமான் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். அந்த முதல் ஹிஜ்ரத் தில் தங்களது வீட்டையும், நாட்டையும், சொந்த பந்தங்களையும் விட்டு விட்டு, புதிய நாட்டுக்கு இடம் பெயர்ந்து, இறைவனுடைய திருப்பொருத்தத்திற்காக நாடு துறந்து சென்ற முஸ்லிம்களின் குழுவில் உதுமான் (ரலி) அவர்களும் இருந்தார்கள்.

இன்னும் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் நடைபெற்ற பொழுதும், மக்காவிலிருந்து இடம் பெயர்ந்து மதீனாவில் சென்று தங்கினர்.

உதுமான் பின் அஃப்பான் (ரலி) வாழ்க்கை வரலாறு

 


1. ஆரம்ப கால வாழ்க்கை

''இந்தத் தம்பதிகளுக்கு அல்லாஹ் பாதுகாவலனாக இருக்கட்டும்!”” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்களால் வாழ்த்துப் பெற்றவர்கள் உதுமான் (ரலி) அவர்கள். தம்பதியர்களிலேயே, இஸ்லாத்திற்காக தங்களது வாழ்வின் சுகங்களை அற்பணித்தவர்களுள், உதுமான் (ரலி) அவர்கள் பெருமைக்குரியவர்கள்.

மக்காவில் குறைஷிகளின் கொடுமைகள் தாங்கவியலாத நிலைக்குச் சென்று கொண்டிருந்த பொழுது, அவர்களது கொடுமைகளில் இருந்து தப்பிப்பதற்காக உதுமான் (ரலி) அவர்களும், அவர்களது மனைவியும் அபீஸீனியாவிற்கு கிளம்பிக் கொண்டிருந்த பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது மருமகனாரான உதுமான் (ரலி) அவர்களைப் பார்த்து, மேற்கூறிய வார்த்தைகளைக் கூறினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின் 6 ஆண்டுகள் கழித்துப் பிறந்தவர் தான் உதுமான் (ரலி) அவர்கள். இவரது தந்தையின் பெயர் அஃப்பான். தாயாரின் பெயர் அர்வா. இவர்களது பேத்தி, பைஸா, அப்துல் முத்தலிப்பின் மகளாவார், எனவே, இவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மாமி முறையாக வந்தவர். உதுமான் (ரலி) அவர்கள் உமைய்யா கோத்திரத்தைச் சேர்ந்தவர், இது குறைஷிகளின் ஒரு கிளைக் கோத்திரமாகும். இவர்கள் பனூ ஹாஷிம் கோத்திரத்தவர்களுக்கு இணையான அந்தஸ்துப் பெற்றவர்கள். குரைஷிகளின் கொடி இவர்களது வசம் தான் இருந்து வந்தது.

உதுமான் (ரலி) அவர்கள் ஒரு துணி வியாபாரியாக இருந்தார்கள். இவர்களது வியாபாரம் நல்ல முறையில் செழிப்போடு வளர்ந்த காரணத்தால், நகரிலேயே வெற்றிகரமான வியாபாரி என்ற அந்தஸ்துப் பெற்றவரானார். அவர் அடிக்கடி வியாபார விஷயமாக சிரியாவுக்கு போய் வரக் கூடியவராகவும் இருந்தார். நல்ல சிறப்பான வியாபார முன்னேற்றம், செல்வத்தை அதிகரித்ததோடு, மக்கள் மத்தியில் செல்வாக்கையும் அதிகரிக்கச் செய்தது. இருப்பினும், அவர் இளகிய மனம் படைத்தவராக இருந்தார். அவர் தனது பொருளாதார வளத்தை ஏழைகளுக்கு உதவுவதற்காகவே தேடினார். பணம் ஒருவரது துன்பத்தைப் போக்குமென்று சொன்னால், உதுமான் (ரலி) அவர்கள் அவ்வாறான உதவிகளுக்கு எப்பொழுதும் தயாரகவே இருந்தார்கள்.