Thursday, 29 October 2015

அல் பகரா - பசு மாடு

அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "பத்னுல் வாதி" பள்ளத்தில் நின்று "ஜம்ரத்துல் அகபா"வின் மீது ஏழு சிறு கற்களை எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீரும் கூறிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம், "மக்கள் மேற்பரப்பில் நின்றல்லவா கல்லை எறிகின்றனர்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது ஆணையாக! "அல்பகரா" அத்தியாயம் எவருக்கு அருளப்பெற்றதோ (அந்த அல்லாஹ்வின் தூதர்-ஸல்) அவர்கள் (கல்லை எறிந்தபடி) நின்றிருந்த இடம் இதுதான்" என்று பதிலளித்தார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

முஸ்லிம் : 2492

அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் ஹஜ் செய்தேன். அவர்கள் இறையில்லம் கஅபா தமக்கு இடப்பக்கமாகவும், மினா தமக்கு வலப்பக்கமாகவும் இருக்கும்படி (பத்னுல் வாதி பள்ளத்தாக்கில்) நின்று ஜம்ராவின் மீது ஏழு சிறு கற்களை எறிந்தார்கள். மேலும், "அல்பகரா அத்தியாயம் எவருக்கு அருளப்பெற்றதோ அவர்கள் (கல்லை எறிந்தபடி) நின்றிருந்த இடம் இதுதான்" என்றும் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

முஸ்லிம் : 2494

அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஹஜ்ஜின்போது) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "பத்னுல் வாதி" பள்ளத்தாக்கில் நின்று (ஜம்ராவின் மீது) கல்லை எறிந்துகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் "மக்கள் பள்ளத்தாக்கின் மேற்பரப்பில் நின்று ஜம்ராவின் மீது கல்லை எறிகின்றனரே? (ஆனால் தாங்கள் பள்ளத்தில் நின்று கல்லை எறிகின்றீர்களே?)" என்று கேட்கப்பட்டது. அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக! "அல்பகரா" அத்தியாயம் எவருக்கு அருளப்பெற்றதோ அவர்கள் இங்கிருந்ததுதான் (ஜம்ராவின் மீது) கல்லை எறிந்தார்கள்" என்று பதிலளித்தார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

முஸ்லிம் : 2496

No comments:

Post a Comment