Saturday, 10 December 2011

மணப் பெண்களுடன் சில வார்த்தைகள்...


 அஸ்ஸலாமு அலைக்கும் 

அன்புள்ள சகோதரிகளே,

இன்று அல்லது நாளை திருமண பந்தத்தில் இணைய இருக்கும் மணப் பெண்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக மாற்றிக் கொள்வதற்கு சில வழிகாட்டல்களை இங்கு தொகுத்து வழங்குகின்றோம்.

1. உங்களது கணவன் விரும்புபவற்றை அறிந்துகொள்ளுங்கள். அவற்றை நிறைவேற்றுங்கள். அவர் வெறுப்பவற்றை அறிந்துகொண்டு அவற்றை விட்டுவிடுங்கள்.

2. கணவனுடன் பொய் பேசவேண்டாம். நீங்கள் அவருடன் தெளிவாக நடந்துகொள்ளும்போது அவர் நீங்கள் தவறிழைத்தாலும் மன்னித்து விடுவார். மாற்றமாக நீங்கள் பொய் பேசினால் அவர் உங்களை நம்பமாட்டார். அல்லாஹுத்தஆலாவும் மனிதனின் மறதிக்கும் தவறுக்கும் அவனைத் தண்டிப்பதில்லை. ஆனால், பொய் பேசினால் அவன் தண்டிக்கப்படுவான்.


3. உங்களுக்கு தெரிந்தவர்கள், உறவினர்களுக்கு முன்பாக கணவனின் குறைகள், பழக்கவழக்கங்கள், அவருடைய கருத்துக்கள் மற்றும் அவரிடமிருந்த நீங்கள் தெரிந்துகொண்டவற்றை பேசவேண்டாம்.


4. கணவனை பரிகசிப்பதை தவிர்ந்து கொள்ளுங்கள். ஒரு ஆண் தன்னைப் பரிகசிக்கின்ற பெண்ணை ஒரு போதும் விரும்பமாட்டான். என்றாலும் கணவனின் குறைகளை மென்மையாகவும் பண்பாட்டுடனும் பேச முடியும். ஆனால், அந்த சந்தர்ப்பத்தில் உங்கள் இருவரைத் தவிர வேறெவரும் இருக்கக் கூடாது.


5. கணவன் பேசுவதை கவனமாகக் கேளுங்கள். அவர் உங்களோடு வீட்டிலிருப்பது உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்பதை வெளிப்படுத்துங்கள். உங்களுடன் அவர் பகிர்ந்து கொள்கின்ற அழகிய உணர்வுகளுக்காக அவரைப் புகழுங்கள்.


6. நீங்கள் இருக்கின்ற இடத்தில் சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத் துபவராக செயற்படுங்கள்.


7. உங்கள் கணவர் செய்கின்ற சிறிய தவறுகளை கண்டுகொள்ளாதீர்கள். அவரும் உங்கள் தவறுகளை மன்னித்துவிடுவார்.


8. உங்கள் கணவர் கோபப்படுவதைக் கண்டால் தொடர்ந்து பேசுவதை உடனடியாக நிறுத்திவிடுங்கள். அந்த இடத்தைவிட்டும் நகர்ந்துவிடுங்கள்.


9. உங்களுக்கிடையே ஏற்படுகின்ற கோபங்களுக்கான காரணங்கள் முரண்பாட்டிற்கான காரணங்கள் போன்றவற்றை பேசும்போது அமைதியைக் கைக்கொள்ளுங்கள்.


10. உங்களுக்கிடையில் ஏற்படுகின்ற வழமையான முரண்பாடுகளை நீங்களே தீர்த்துக்கொள்ளுங்கள். அவற்றை மத்தியஸ்தர்களிடம் கொண்டுசெல்லத் தேவையில்லை. நீங்களும் உங்கள் கணவரும் பங்காளர்கள். மாற்றமாக போட்டியாளர்கள் அல்லர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


11. கணவனின் குடும்பத்தினருக்கு நீங்கள் செய்யவேண்டிய கடமைகளை மறந்துவிட வேண்டாம். அவர்களுடைய விஷேச நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள்.



12. எப்போதும் பேசிக்கொண்டிருக்காதீர்கள்.
 முறைப்பாடுகளை முன்வைப்பவராகவும் இருக்காதீர்கள். எப்போது பேசவேண்டும், எப்போது மௌனமாக இருக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

13. உங்களுடைய கணவர் எல்லா விசயங்களிலும் உங்களுடன் உடன்பட மாட்டார் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். அவருடைய கருத்தில், ஆளுமையில், சிந்தனைகளில், பார்வையில் வித்தியாசங்கள், வேறுபாடுகள் இருக்கலாம். அவை உங்களுக்கு எதிரானவை அல்ல என்பதைப்புரிந்து கொள்ளுங்கள்.


14. உங்களுடைய பெற்றோரை பற்றி அவர்களின் தவறுகளைப் பற்றி அதிகமாகப் பேசவேண்டாம். ஏனெனில், அதிகமான கணவன்மார் தமது பெற்றோர் செய்பவற்றையே தாமும் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.


15. நிறைவாக சிறந்த திருமண வாழ்வின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ரஸூல் (ஸல்) அவர்களின் பின்வரும் ஹதீஸை மறந்துவிடாதீர்கள்:

அவளைப் பார்க்கும்போது அவனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்து பவளாக அவள் இருப்பாள். அவன் இல்லாதபோது தன்னைப் பாதுகாத்துக்கொள்வதோடு கணவனின் செல்வத்தையும் மானத்தையும் பாதுகாத்துக்கொள்வாள்.

No comments:

Post a Comment