Saturday, 8 December 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


வேளை


அவிசுவாசிகள் அடிக்கடி கூறிவந்த ஒரு விஷயம், உண்மையாகவே இறைவன் தமக்கேதும் செய்திகள் அனுப்ப வேண்டியிருப்பின் நிச்சயமாக ஒரு வானவரை அனுப்பியிருப்பான் என்பதாகும். குர்ஆன் இதற்குப் பதிலளித்தது:

பூமியில் மலக்குகளே வசித்திருந்து (அதில்) அவர்கள் சாவதானமாக நடந்து திரிந்து கொண்டுமிருந்தால் நாமும் வானத்திலிருந்து ஒரு மலக்கையே ( நம்முடைய) தூதராக அவர்களிடம் அனுப்பியிருப்போம்!.

குர்ஆன் : 17:95

காலத்துக்குக் காலம் ஜிப்ரீல் இறைவசனங்களுடன் வருகை தந்து கொண்டிருந்தாலும், குர்ஆனின் அடிப்படையில் அவர் ஒரு தூதராக அமைந்துவிடவில்லை. ஏனெனில் தூது யாருக்காக வந்துள்ளதோ அவர்கள் மத்தியிலிருந்து ஒருவரையே அதற்கென நிலை நிறுத்த வேண்டியிருந்தது. இறை வசனங்கள் மேலும் கூறின :

Friday, 7 December 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

குடும்பப் பிரிவினைகள் ( தொடர்… )



சிற்சிறு லெளகிக உறவுகட்கும் மேலாகச் சத்தியத்துடனான தொடர்புகளை உன்னதமாகக் கொண்டு செயல்பட முனையும் தன்மையை அதீ கோத்திரத்தின் முக்கியத்துவம் வாய்ந்த குடும்பங்களுள் ஒன்றன் முன்னைய தலைமுறையிலேயே கண்டு கொள்ள முடிந்தது. 

நுபைலுக்கு இரு வேறு மனைவியர் மூலம் இரு புதல்வர்கள் இருந்தனர். கத்தாப், அம்ர் என்போர். நுபைல் இறந்ததன் பின்னர் கத்தாபின் தாயார், கணவரின் மறுதாரத்து மகனான அம்ரை மணஞ் செய்து கொண்டார். அவர்களது மகன் ஸைத் எனப் பெயரிடப்பட்டார். ஆக, கத்தாபும் ஸைதும் தாய் வழியில் அரைச் சோதரராயிருந்தனர். வரகாஹ்வைப் போல், ஸைதும் குறைஷியரினின்றும் வேறுபட்ட சிந்தை கொண்டவராக விளங்கினார். சிலை வணக்கத்தையும் பல்தெய்வ வழிபாடுகளையும் விருப்பாதிருந்த அவர், சிலைகளுக்கெனப் பலியீடு செய்யப்பட்ட எதனையும் உட்கொள்வதைக் கூட மறுத்துரைத்தார். தான் இப்றாஹீமின் இறைவனையே வழிப்படுவதாகப் பிரகடனம் செய்ததோடு தனது சொந்த கோத்திரத்தவர்களையே பகிரங்கமாகக் கண்டனம் செய்யவும் அவர் தயங்கவில்லை. மறுபுறம் கத்தாப், குறைஷியரின் பண்டை வழக்கங்களை அப்படியப்படியே பின் பற்றுபவராயிருந்தார். தாம் வழிபட்டு வந்த கடவுளரைக் கண்டனம் செய்து வந்த ஸைத்தின் நடவடிக்கைகள் கத்தாபுக்கு அவதூறு ஏற்படுத்துவனவாய் அமைந்தன. எனவே கத்தாப், ஸைதைத் துயருறுத்தத் தொடங்கி, அவரை மக்காவின் குழிவுப் பிரதேசத்தினின்றும் வெளியேற்றி அயலிலுள்ள மலைப்பிரதேசத்தில் சென்று வசிக்கச் செய்தார். இளைஞர்களைக் கொண்டதொரு குழுவினர், ஸைத் புனிதத்தலத்துள் நுழையாதவாறு காக்கும்படி பணிக்கப்பட்டனர். வெளியேற்றப்பட்ட ஸைத், ஹிஜாஸை விட்டும் தானே நீங்கி ஈராக்கின் வட பகுதியில் உள்ள மோசூல் வரை சென்றார். பின்னர் தென் மேற்காகச் சென்று ஸிரியாவை அடைந்தார். சென்றவிடமெல்லாம் தான் சந்தித்த மதகுருமாரிடமும் ரப்பிகளிடமும் இப்றாஹீமின் மதம் குறித்து விசாரணைகள் மேற்கொண்டு வந்தார் அவர். இறுதியில் ஒரு மதகுருவானவர், ஓர் இறைதூதர் தோற்றமுறும் காலம் நெருங்கி விட்டதெனவும், ஸைத் எந்த நாட்டை விட்டு வந்தாரோ, அந்த நாட்டிலேயே அவர் தோற்றம் பெறுவாரெனவும், அவர் தேடிக்கொண்டிருக்கும் மதத்தையே அவ்விறைத்தூதர் போதிப்பார் எனவும் கூறிவைத்தார். மீண்டும் வந்து கொண்டிருந்த ஸைத், ஸிரியாவின் தென்னெல்லையில் லக்ம் எனும் பிரதேசத்தில் வைத்துத் தாக்கிக் கொள்ளப்பட்டார். வரகாஹ் இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டபோது, அவரை போற்றித் துக்ககரமானதொரு பாடலை யாத்தார். நபிகளாரும் ஸைதைப் பற்றிக் கூறினார்கள்:
“மீளவுயிர்பிக்கும் நாளின் போது, தனியான அவருள், ஒரு முழு சமூகத்தினது பெறுமதியை உடையவராக அவர் எழுப்பப்படுவார்”.- இ.இ. 145

Thursday, 6 December 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

குடும்பப் பிரிவினைகள் ( தொடர்… )


அபூ-பக்ர் எத்தனையோ பேரை இஸ்லாத்தின் பாலாக்கியிருந்தும் அவரது மகன் அப்த்-அல்-கஅபாவை மனமாற்ற முடியவில்லை. உம்ம்-ரூமான் மூலம் கிடைத்த அவர், தனது பெற்றோரின் முயற்சிகளையெல்லாம் மறுத்து, இஸ்லாத்தின் வெளியிலேயே நின்றார்.

விசுவாசிகளுக்குப் பல ஏமாற்றங்கள் ஏற்பட்டு வந்தன. பரந்து வரும் புதியதொரு சக்தியின் உத்வேகத்தின் காரணமாக அவிசுவாசிகளும் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கலாயினர். தமது அன்றாட வாழ்க்கை முறைகளுக்குத் தடைகளையேற்படுத்தவும், எதிர்காலத் திட்டங்களைத் தகர்க்கவுமே இப்புதிய இயக்கம் கிளம்பியுள்ளதென அவர்கள் கொண்டனர். தீவிரமான உடனடிப் பிரச்சினையாயமைந்தது, தமது மக்களின் திருமண பந்தங்களை ஏற்படுத்திக் கொள்வதில் அவர்கள் எதிர்நோக்கிய சங்கடங்களாகும். தமது கோத்திரத்தவரான அப்த்-அல்லாஹ் தனது ஒன்று விட்ட சகோதரரான முஹம்மதைப் பகிரங்கமாக எதிர்த்து நின்றமை பனீ மக்ஸும்களுக்கு ஆறுதல் அளிப்பதாயிருந்தது. அப்த்-அல்லாஹ்வின் சகோதரர் ஸுஹைர் புதிய மதத்துக்கு தீவிர எதிர்ப்புகளேதும் காட்டவுமில்லை; அதில் இணையவுமில்லை. 

அப்த்-அல்லாஹ்வைப் போலவே அவரும் ஆதிகாவின் மற்மகன். அப்த்-அல்-முத்தலிபின் மகளாவார் ஆதிகா. அப்த்-அல்லாஹ், ஸுஹைர் ஆகியோரின் காலமாகிவிட்ட தந்தையார், ஆதிகா என்ற பெயரையே உடைய மற்றுமொரு மனைவியையும் கொண்டிருந்தார். அம்மனைவி மூலம் கிட்டியவர் ஹிந்த் எனப் பெயரிய ஒரு மகள். மிக்க அழகியான ஹிந்த் அப்போது பத்தொன்பது வயதை எட்டியிருந்து, தனது இரு அரைச்சோதரரதும் ஒன்று விட்ட சகோதரரான அபூஸலாமாவை மணஞ் செய்திருந்தார். மக்ஸுமின் அடுத்த கிளையைச் சார்ந்தவர் அபூஸலாமா. இரு கிளையினருக்குமிடையிலான இத்திருமண உறவினால் முழுக்கோத்திரத்தாருமே மகிழ்ந்தனர். எனினும் அபூஸலாமா இஸ்லாத்தில் இணைந்து கொண்ட விவரம் தெரிய வந்தமை அனைவரையும் ஏமாற்றத்துக்குள்ளாக்குவதாயது. இவ்வேமாற்றம் இரட்டிப்பாகக் காரணமாயமைந்தது, ஹிந்த்-உம்ம்ஸலாமா என்றே இவர் எப்போதும் அழைக்கப்படுபவரானார் - தனது கணவனை விட்டு வராமல் தானும் அவரைப் போலவே நபிகளாரை மிக விசுவாசமாகப் பின்பற்றுவோரில் ஒருவரானமை.

Wednesday, 5 December 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


குடும்பப் பிரிவினைகள்


அபூதாலிபின் மக்களான தாலிபும் அகீலும் தமது இளைய சகோதரர்களான ஜஅபர், அலீ ஆகியோரின் முன்மாதிரியைப் பின்பற்றாது விட்டனர். தந்தையாரைப் போல அவர்களும் புதிய மதத்தைச் சாராதவர்களாகவே இருந்தனர். என்றாலும் அவர்கள் பொறைமையுடையோராய் விளங்கினர். அபூலஹ்பின் போக்கு முற்றும் மாறானதாக இருந்தது. குறைஷித் தலைவர்கள் அண்மையில் நபிகளாருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னர் வெளிப்படையாகவே தன் பகைமையைக் காட்டி வந்தார் இவர். அவரது மனைவி, ஷம்ஸிய கோத்திரத்துத் தலைவர் அபூஸுப்யானின் சகோதரி, உம்ம் ஜமீலும் நபிகளார் மீது ஆழ்ந்த வெறுப்பினைக் கொண்டிருந்தார்.

உம்ம் ஜமீலும், கணவர் அபூலஹப்பும் இணைந்து, தமது இரு புதல்வர்களையும் வற்புறுத்தி, ருகையாவுடனும் உம்ம் குல்தூமுடனுமான அவர்களது திருமண ஒப்பந்தங்களை முறித்து விடச் செய்தனர். இத்திருமணங்கள் ஏற்கெனவே நிகழ்ந்திருந்தனவோ அன்றி முடிவு முடிவு செய்யப்பட்ட நிலையில் தான் இருந்தனவோ என்பது குறித்துத் தெளிவில்லை. மணமுறிவுகளின் காரணமாக உம்ம் ஜமீல் மிக்க மகிழ்வுற்றாலும் அம்மகிழ்ச்சி நீடிக்க முடியவில்லை. ஏனெனில் அவரது ஒன்று விட்ட சகோதரரும், பெரும் செல்வந்தரும், உமையாக் கோத்திரத்தவருமான உத்மான்-இப்ன்-அப்பான், ருகையாவைத் திருமணம் செய்துக் கொள்ளக் கேட்டு மணஞ்செய்து கொண்டார். இத்திருமணம் நபிகளாருக்கும் கதீஜாவுக்கும் மன நிறைவையளித்தது. ருகையா மகிழ்ந்தார். மருமகனும் மிக்க விசுவாசத்துடன் நடந்து கொண்டார்.

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

வியப்பும்
நம்பிக்கையும்


குறைஷியருள், தம் தலைவர்களளவு வாழ்க்கையில் செல்வமும் செல்வாக்கும் பெற்றுக் கொள்ள இயலாது போனோரும், இளைஞர்களாயிருந்தோரும் இறைவசனங்களின் மூலமான போதனைகளை ஒரேயடியாக ஏற்றுக் கொண்டனர் எனக் கூறுவதற்கில்லை. 

ஒரு வகை சுயதிருப்தி கண்டவர்களாகவே அவர்கள் வாழ்ந்து வந்தனர். என்றாலும் ஒரு ஊதுகுழலின் ஓசை போல தமது சின்னஞ்சிறு உலகில் வந்திறங்கிய இந்த அழைப்பின் கூர்மையும் அழுத்தமும் கேளாத அளவுக்கு அவர்களது செவிகள் அடைபட்டிருக்கவில்லை.

உத்மான் பாலை நிலத்தில் கேட்ட ‘ உறங்குபவர்களே விழித்தெழுங்கள் ’ என்ற அசரீரி, முழுப் போதனைக்குமே இயைந்ததாக இருந்தது. போதனையை ஏற்றவர்களோ, உண்மையிலேயே தாம் உறக்கத்திலிருந்து விழித்துப் புதியதொரு வாழ்க்கையினுள் புகுந்தது போன்ற உணர்வைப் பெற்றிருந்தனர்.

அவிசுவாசிகளின் முன்னைய பின்னைய நிலைமைகளை இறைவசனங்கள் நன்கு தெளிவாக்கி வைத்தன. இவ்வுலகத்தில் நாம் வாழ்ந்திருப்பதைத் தவிர ( இறந்த பின் வேறு வாழ்க்கை ) இல்லை; ஆகவே ( இறந்த பின் ) நாம் உயிர்ப்பிக்கப்பட மாட்டோம் ( குர்ஆன்: 6:29 ) அவிசுவாசிகளின் இத்தகு கூற்றுக்குப் பதிலாக அமைந்தன, வானங்களையும் பூமியையும் அவைகளுக்கு மத்தியிலுள்ளவைகளையும் (வீண்) விளையாட்டுக்காக நாம் சிருஷ்டிக்கவில்லை ( குர்ஆன்: 21:16 ) நாம் உங்களைப் படைத்ததெல்லாம் நிச்சயமாக வீணுக்காக என்றும் நீங்கள் மீண்டும் கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்றும் உறுதியாக எண்ணிக் கொண்டிருந்தீர்களா? ( குர்ஆன் : 23:115 ) முதலிய வாசகங்கள், அவிசுவாச எண்ணங்கள் மனதில் ஆழப்பதியாதோராய் இருந்தோர்க்கு இவ்வாசகங்கள் உண்மையே கூறுவனவாகத் தெரிந்தன. குறிப்பிட்ட இவ்வாசகங்கள் மட்டுமன்றிக் குர்ஆனின் போதனைகள் அனைத்துமே இவ்வாறானதோர் உணர்வையே தூண்டி நின்றன. ஓர் ஒளியாகவும் வழிகாட்டியாகவும் தம்மைத் தாம் சுட்டி நின்றன இறை வசனங்கள். போதனைகளை ஏற்று நடக்க வேண்டுமென்பதற்குப் போதகரின் தன்மைகளும் தூண்டுதலாயிருந்தன. பிறரை ஏமாற்ற முனையாத அளவு உண்மை நிரம்பியவராயிருந்தார் அவர். தன்னைத் தான் ஏமாற்றிக் கொள்ளாத அளவு ஞானம் மிகுந்தவராகவுமிருந்தார். எனவே நபிகளாரை இவர்கள் உறுதியாக நம்பினர். போதனைகள் எச்சரிக்கைகளையும் வாக்குறுதிகளையும் வழங்கின. எச்சரிக்கைகள் ஆவன செய்ய அவர்களைத் தூண்டின; வாக்குறுதிகள் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின.

Tuesday, 4 December 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


குறைஷித் தலைவர்கள் (தொடர்… )



செல்வ நிலையைப் பொறுத்தவரை, குறைஷிக் குலத்தின் பல்வேறு கோத்திரத்தாரும், மேலோர் கீழோவராவதும் கீழோர் மேலோவராவதுமாக பல்வேறு மாற்றங்கட்கும் உட்பட்டு வந்தனர். அப்போதைய சூழலில் பொருள் வளம் மிக்கனவாக விளங்கியவை அப்த்-ஷம்ஸ், மக்ஸும் கோத்திரங்களாகும். ஷம்ஸிய கோத்திரத்தின் ஒரு கிளையாருக்கு உத்பாவும் அவரது சகோதரர் ஷைபாவும் தலைமை வகித்தனர். அதன் உமையாக் கிளையாருக்குத் தலைவராக விளங்கியவர் இவர்களது ஒன்று விட்ட சகோதரர் ஹர்ப்.

ஹர்ப் மரணமடைய, அவரது புதல்வர் அபூ ஸுப்யான் தலைமை பதவியை ஏற்றிருந்தார். ஏனைய பல மனைவியருடன், அபூ ஸுப்யான் உத்பாவின் மகள் ஹிந்த் என்பாரையும் மணஞ் செய்திருந்தார். பொது விவகாரங்களிலும் வர்த்தகத்திலும் அபூ ஸுப்யான் பெரு வெற்றிகள் பெற்று வந்தமைக்குப் பல காரணங்களிருந்தன. தீர்மானங்கள் எடுப்பதில் அவர் கைதேர்ந்தவர். ஆழமாகச் சிந்திப்பவர். பொறுமையுடன் ஆலோசனைகள் நடத்துபவர். தக்க சந்தர்ப்பங்களைத் தவறியேனும் நழுவவிடாத அவரது கூரிய சிந்தனையின் காரணமாகத் தனக்கு நீண்ட காலத்திலாவது சாதகமான பலனேற்படக் கூடுமாயின் மிக்க தன்னடக்கத்துடன் நடந்து கொள்ளக் கூடியவர்.

மனைவியான ஹிந்த் மிக இலகுவாக சினத்துக்குள்ளாவதோடு, எந்த ஒரு விடயத்திலும் சடுதியான முடிவுகளை மேற்கொள்பவராயிருந்தார். முரண்பட்ட போக்குகள் இயல்பாகவே இருவரிடையிலும் மனக் கசப்புகளைத் தோற்றுவிப்பனவாக இருந்தன. என்றாலும் தான் ஏதும் ஒரு தீர்மானம் எடுத்து விட்டால் அதிலிருந்தும் மனைவி ஹிந்த் கூட தன்னைத் திசை திருப்பி விட முடியாத உறுதி படைத்தவராயிருந்தார் அபூ ஸுப்யான். இவர் நபிகளார் மீது காட்டி வந்த எதிர்ப்பு, எதிர்பார்க்கக் கூடியது போல, அபூஜஹ்லின் எதிர்ப்பினைக் காட்டினும் தாக்கம் குன்றியதாகவே இருந்தது.

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


குறைஷித் தலைவர்கள்


நபிகளாரைப் பின்பற்றுபவர்களின் தொகை அதிகரித்துச் சென்றது. என்றாலும் புதிதாக மதம் மாறியவர்கள், அடிமைகளாக அல்லது அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களாக அல்லது சுற்றுப்புறக் குறைஷியராகவே இருந்தமையை அவதானிக்க முடிந்தது.

குழிவின் குறைஷியருள் இஸ்லாத்தைத் தழுவியவர்கள் பொதுவாக வாலிபர்களாக அல்லது இளம் யுவதிகளாக இருந்தனர்.அவர்கள் செல்வாக்குள்ள குடும்பங்களைச் சார்ந்தவர்களானாலும் தம்மளவில் எவ்வித செல்வாக்குமற்றவர்களாகவே விளங்கினர். அவர்களது மதமாற்றம் தம் குடும்பத்தாரதும் மூத்த உறவினர்களதும் சினத்தைப் பன்மடங்கு அதிகரிப்பதாகவே அமைந்தது.

அப்த்-அர்-ரஹ்மான், ஹம்ஸா, அர்கம் ஆகியோரது மதமாற்றம் தனிப்பட்ட பின்னணிகளைக் கொண்டிருந்தது. அவர்கள் தலைமைத்துவ நிலையினின்றும் சேய்மையிலேயே இருந்தனர். குறைஷியரின் தலைவர்களில் சிலரை எவ்வாறேனும் தமது செல்வாக்குக்குள் கொண்டுவர முனைந்தனர் நபிகளார். எவருமே, ஏன் அன்னாரின் பெரிய தந்தையாரான அபூதாலிப் கூட அன்னவரைச் சேர்ந்து கொள்வதில் எவ்வித விருப்பினையும் காட்டவில்லை. தமது தூதினைப் பரப்ப அபூஜஹ்லின் மாமனாரான வலீதைப் போன்ற ஒருவரது ஆதரவு கிடைக்கக் கூடுமாயின் அது பேருதவியாக இருக்கும் எனக்கருதினர் நபிகளார். அவர் மக்ஸுக் கோத்திரத் தலைவராக இருந்தது மட்டுமன்றி, ஒரு வகையில் முழு குறைஷிக் குலத்தவரதும் உத்தியோக பூர்வமற்ற தலைவராகவும் மதிக்கப்பட்டு வந்தார். அத்தோடு ஏனையோரை விட தர்க்கங்களுக்கு செவி சாய்க்கக் கூடிய ஒருவராகவும் அவர் விளங்கினார்.

Monday, 3 December 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

குறைஷியர் தூது ( தொடர்… )

தமது வினாக்களுக்கு எவ்வித பதிலையும் உத்பா கொண்டு வராது விட்டதனால், “ நாங்கள் முஹம்மதை இங்கு வரவழைத்து அவருடன் பேசி வாதாடிப் பார்ப்போம். அதன் மூலம் நாம் எல்லா வழிகளையும் பிரயோகிக்கவில்லை என்ற பழிக்கு ஆளாகாமலிருக்கலாம் ” என்றார் ஒருவர். ‘ உமது மக்களில் உயர்வானோரெல்லாம் உம்முடன் கதைக்கவெனக் கூடியிருக்கிறார்கள் ’ என அன்னாருக்குச் செய்தி அனுப்பினர் குறைஷியர். அவர்களது போக்கில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற எண்ணத்தில் மிக விரைவாகச் சென்றனர் நபிகளார். குறைஷியரைச் சத்தியத்தின் பால் வழிகாட்டும் ஆவல் மிகுந்திருந்தது. எனினும், ஏற்கெனவே முன்வைக்கப்பட்ட பிரேரணைகளே மீண்டும் வைக்கப்பட்டபோது, அன்னாரின் நம்பிக்கையெல்லாம் தகர்ந்து போவதாயிற்று. அவர்கள் பேசி முடிந்ததும் நபிகளார் கூறினார்கள் : 

“ நான் எந்தவோர் ஆவியினாலும் பீடிக்கப்பட்டவனல்ல; உங்களிடையே கெளரவத்தை வேண்டி நிற்பவனுமல்ல; அரச பாரத்தை விரும்பியவனுமல்ல, அல்லாஹ் என்னை உங்களுக்கு அவனுடைய தூதராக அனுப்பியுள்ளான். எனக்கு ஒரு வேதத்தையும் அருளி, உங்களுக்கு நன்மாராயங் கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் இருக்கும்படி எனக்குக் கட்டளையிட்டுள்ளான். அல்லாஹ்வின் தூதினை உங்களுக்கு நான் அறிவித்துள்ளேன். நல்ல ஆலோசனைகளையும் கூறியுள்ளேன். நான் உங்களுக்குக் கொண்டு வந்திருப்பவற்றை நீங்கள் ஏற்றுக் கொண்டால், அது உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மை பயக்கும். அவற்றை நீங்கள் நிராகரித்தாலோ, உங்களுக்கும் எனக்கும் இடையில் அல்லாஹ்வின் நியாயத் தீர்ப்பை எதிர் நோக்கி அமைதியுடன் இருப்பேன் ”. - ( இ.இ.188 )

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

குறைஷியர் தூது

அன்று முதல், தான் ஏற்றுக் கொண்ட இஸ்லாத்தை மிகவும் ஒழுங்காகப் பேணி வந்தார் ஹம்ஸா. நபிகளாரின் கட்டளைகளையும் நடைமுறைப்படுத்தி வரலானார். அவரது மதமாற்றம் குறைஷிகள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தமை தெளிவாக இருந்தது. ஹம்ஸா பாதுகாப்பளிப்பார் என்ற காரணத்தினால், நபிகளாரை நேரடியாகத் தொல்லைப்படுத்துவதிலும் தயக்கம் காட்டலாயினர் குறைஷியர். மறுபுறம், நிலைமையின் தீவிரத்தன்மையை நன்கு உணர்ந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் இவ்வெதிர்பாராத மதமாற்றம் உணர்த்தி நின்றது. பயங்கரமான இச்சூழ்நிலை, அறபிகளிடம் தமக்கிருக்கும் உயரிய ஸ்தானத்தைத் தகர்த்து விடலாம் எனக் கருதிய குறைஷியர், இப்புதிய இயக்கத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பது அவசியம் எனக் கொண்டனர். அபாயத்தின் தன்மை, உபாயங்களை மாற்றியமைக்க வேண்டியமையை வற்புறுத்தியது. எனவே அப்த்-ஷம்ஸ் கோத்திரத்தாரின் தலைவர்களுள் ஒருவரான உத்பா-இப்ன்-ராபியா சபையில் தெரிவித்ததோர் ஆலோசனையை அவர்கள் உடனடியாகவே அங்கீகரித்தனர். 

“ நான் ஏன் முஹம்மதிடம் செல்லக் கூடாது? ” என வினவிய அவர், “ அவரிடம் சில பிரேரணைகளை சம்ர்ப்பிப்போம். அவற்றில் சிலவற்றை அவர் ஏற்கலாம் அல்லவா? அவர் எங்களை நிம்மதியாக வாழ விடுவார் என்ற நியதியின் பேரில், அவர் ஏற்றுக்கொள்பவற்றை நாம் அவருக்கு அளிப்போம் ” எனக் கருத்துத் தெரிவித்தார். 
அவ்வேளை நபிகளார் கஃபாவின் அருகில் அமர்ந்திருப்பதாக செய்தி வந்தது. உத்பா குறைஷித் தலைவர்களின் சபையை விட்டெழுந்து பள்ளிவாசலுக்குச் சென்றார். இம்முயற்சியில் தான் இறங்குவதற்கு அவர் முடிவு செய்யப் பல காரணங்கள் இருந்தன, ஒன்று, அவர் ஹாஷிமின் சகோதரனான அப்த்-ஷம்ஸின் பேரனாயிருந்தமை. மிகப் பெரும் தலைவனாயிருந்த குஸையின் மகன் அப்த்-மனாபின் இரு புதல்வர்களதும் பெயரால் வழங்கி வந்த இவ்விரு கோத்திரத்தாரும் வெகுவாகப் பிரிந்து சென்றிருந்தாலும் கூட, அவர்களது தோற்றம் ஒரே மூலத்தையே கொண்டிருந்தமையால் அவர்களிடையே இருந்து வந்த வேற்றுமைகளைக் குறைத்துக் கொள்வது இலகுவாயிருந்தது. அத்தோடு உத்பா, குறைஷிகளிலேயே வன்மை குறைந்த ஒருவராக, இதமான சுபாவங் கொண்டவராகவும் புத்தி சாதுரியம் மிக்கவராகவும் விளங்கினார்.

Sunday, 2 December 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


அபூஜஹ்லும்
ஹம்ஸாவும்


மக்காவில் விசுவாசிகளின் தொகை பெருகிச் சென்றது போலவே, விசுவாசிகளுக்கு எதிரான சக்திகளும் பெருகிச் சென்றன. குறைஷியரின் தலைவர்கள் சிலர் ஒரு நாள் ஹிஜ்ரின் மீது கூடியிருந்தனர். நபிகளார் மீதான ஒவ்வொருவரது கோபமும் கிளரப்பட்டு வந்தது. இவ்வேளை நபிகளாரும் புண்ணியத்தலத்தினுள் நுழைந்து கஃபாவின் கிழக்கு மூலைக்குச் சென்று, கரும்பாறையை முத்தமிட்டு வழக்கம் போலவே கஃபாவை வலம் வரத்தொடங்கினார்கள். ஹிஜ்ரை அண்மியபோது குறைஷியர்கள் தம் குரலை உயர்த்தி அன்னார் மீது அபவாதம் கூறி நிந்தனை செய்யத் தொடங்கினர். கூறியன அனைத்தும் நபிகளாரின் செவிகளுள் வீழ்ந்தமையை அன்னாரின் முகம் தெளிவுறக் காட்டியது. இரண்டாம் முறை அவர்களைத் தாண்டிச் சென்ற போதும் இது தொடர்ந்தது. மூன்றாம் முறை அவ்விடத்தைக் கடக்கும் போதும் நிந்தனை தொடரவே, நபிகளார் அவ்விடத்தில் நின்று, “ ஓ குறைஷியரே! நான் சொல்வதை நீங்கள் கேட்பீர்களா? நிச்சயமாக எனது உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவனின் மீது ஆணையாக, நான் உங்களுக்கு அழிவையே கொண்டு வந்துள்ளேன் ” - (இ.இ. 183 ) எனக் கூறினார்கள். கூறப்பட்டவையும், அன்னார் அவற்றைக் கூறிய முறையும் அவர்கள் அனைவரையும் மந்திரவயப்படுத்தியது போலாயிற்று. ஒருவரும் அசையவில்லை : எவரும் எதனையும் கூறவுமில்லை. அமைதி தொடர்ந்தது. அவர்களுள் ஒருவர் எழுந்து அமைதியாக, 




“ அபுல் காஸிமே! உமது வழியில் செல்வீராக! இறைவன் பெயரால் நிச்சயமாக நீர் ஏதும் அறியாத மடையனல்லவே! ” என்றார். என்றாலும் இவ்வமைதி தொடரவில்லை. தாம் அனைவரும் திடீரென மதிப்பும் வியப்பும் கலந்ததொரு நிலைக்கு ஆளானமை குறித்துக் குறைஷித் தலைவர்கள் ஒவ்வொருவரும் தம்மைத் தாம் குறை கூறிக் கொள்ளலாயினர். எனினும் இவ்வாறேற்பட்ட சடுதியான பலவீனத்துக்குத் தக்க பிரதியீடுகளைப் பின்னர் மேற்கொள்வதென சபதம் செய்து கொண்டனர் அவர்கள்.

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


அவ்ஸ்களும்
கஸ்ரஜ்களும்

அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரத்தார்கள், யத்ரிபில் தம்மோடு வாழ்ந்து வந்த யூத கோத்திரத்தார்களுடன் பலவித உடன்படிக்கைகள் செய்திருந்தனர். எனினும் இவர்களிடையிலான உறவுகள் எப்போதும் சுமுகமானவையாக இருக்கவில்லை. பிரச்சினைகள் பல உருவாகி, உறவுகள் பிரச்சினைக்குறியனவாயின. இறவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகத்தவராக, ஏக தெய்வ வணக்கம் செய்து வந்த யூதர்கள், பல தெய்வ வணக்கஸ்த்தரான அறபிகளை வெறுத்து வந்தனர். என்றாலும் தொகையில் மிகைத்தவர்களென்ற காரணத்தால் அறபிகளை கெளரவித்து வாழ வேண்டிய நிலையுமிருந்தது. உறவுகள் கசந்து விரக்தியுற்ற சந்தர்ப்பங்களில் யூதர்கள் கூறுவார்கள் :

“ இறைதூதர் ஒருவர் அனுப்பப்பட வேண்டிய காலம் சமீபத்திலிருக்கின்றது. அவரோடு இணைந்து உங்களை நாம் அழித்து விடுவோம் - ஆத், இராம் ( தமக்கனுப்பப்பட்ட இறைதூதர்களுக்கு பணிய மறுத்ததனால் திடீரென அழிவுக்குள்ளாக்கப்பட்ட ஆதி அறபு கோத்திரங்கள் ) கோத்திரத்தாரை அழித்தது போல ”.

Saturday, 1 December 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

குறைஷியர் எதிர்ப்பு…( தொடர்… )


குறைஷியர் தமது திட்டங்களை மிக்க வைராக்கியத்துடனும் திறம்படவும் செயல் படுத்தி வந்தனர். எனினும் தனியொரு விவகாரத்தில் எவ்வாறோ அவர்களது திட்டங்களனைத்தும் ஆரம்பத்திலிருந்தே தோல்வியில் முடிந்தன. மக்காவின் வடமேற்குப் பிரதேசத்தில் செங்கடலை அண்மியிருந்த பனீ கிபார் கோத்திரத்தின் அபூ'தர் என்பார் ஏற்கெனவே நபிகளார் குறித்தும் அன்னாருக்குண்டாயிருந்த எதிர்ப்புகள் குறித்தும் தெரிந்திருந்தார். தனது கோத்திரத்தாரின் பெரும்பான்மையினரைப் போல இவரும் வழிப்பறிக் கொள்ளைக்காரராகவே இருந்தார். எனினும் ஏனையோரைப் போலன்றி அவர் இறைவனின் ஏகத்துவம் பற்றி அசைக்க முடியாத நம்பிக்கையுடையவராகவும் சிலை வணக்கத்துக்கு எவ்வித மதிப்புமளிக்காதவராகவும் விளங்கினார். ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு மக்கா செனறிருந்த அவரது சகோதரர் உனைஸ் திரும்பி வந்ததும், குறைஷியரிடையே ஒரு மனிதர் தன்னை ஓர் இறைதூதர் எனக் கூறிக் கொள்வதாகவும், அவர் லா இலாஹ இல்லல்லாஹ் ‘ வணக்கத்துக்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை ’ எனப் பிரசாரம் புரிவதாகவும். இதனால் குறைஷியர் அவரைத் தம்மவரல்ல எனக் கூறிவருவதாகவும் அபூதர்ரிடம் தெரிவித்தார். உடனடியாகவே மக்காவுக்குப் புறப்பட்டார் அபூதர். ஓர் உண்மையான இறைதூதர் இதோ இருக்கின்றார் என்ற நம்பிக்கையில் சென்ற அவரை மக்காவுக்கான பாதையில் சந்தித்த குறைஷியர், அவர் எவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள விழைந்தாரோ அவற்றையெல்லாம் கூறி வைத்தனர். சிரமங்களேதுமின்றி அவர் நபிகளாரின் வீட்டையடைந்தார். வீட்டு முற்றத்தில் ஒரு வாங்கின் மேல் படுத்திருந்தனர் நபிகளார். போர்வையின் ஒரு முனை அன்னாரின் முகத்தை மறைத்திருந்தது. அபூதர் அன்னாரை எழுப்பி உதய சோபனம் கூறினார். “ உங்கள் மீது சாந்தி உண்டாவதாக ” எனப் பதிலிறுத்தனர் நபிகளார்.
“ உமது பிரகடனங்களை எனக்குரைப்பீராக ” என்றார் அந்த நாடோடி அறபி. “ நான் கவிஞனல்ல; நான் இப்போதுரைப்பது குர்ஆன். அதனை உரைப்பது நானல்ல; அல்லாஹ்வே அதனைக் கூறுகின்றான் ” என்ற நபிகளாரிடம் “ எனக்காக அதைக் கூறுவீராக ” என வேண்டினார் அபூதர். நபிகளார் ஒரு ஸூறாவை ஓதிக் காட்டினர். உடனே அபூதர், 
“ வணக்கத்துக்குரிய நாயன் யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர, முஹம்மத் அல்லாஹ்வின் திருத்தூதராவார் எனச் சாட்சி பகர்கிறேன் ” எனக் கூறினார். “ உம்முடைய மக்கள் யார்? ” என வினவிய நபிகளார் பதிலைக் கேட்டதும் அபூதர்ரை மேலும் கீழும் வியப்புடன் பார்த்தவர்களாகக் கூறினார்கள் :

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


குறைஷியர் எதிர்ப்பு


இஸ்லாத்தின் இவ்வாரம்ப காலங்களில் விசுவாசிகள் பலரும் ஒன்று சேர்ந்து, குழுக்களாக மக்காவை அண்மியிருந்த குறுகிய பள்ளத்தாக்குகளுக்குச் சென்று பிறர் காணாதவாறு கூட்டாகத் தொழுது வந்தனர். ஒரு நாள் அவ்வழியாக வந்த சிலை வணக்கஸ்தர்கள் சிலர் அவர்களைத் தடுத்துக் கேவலப்படுத்தினர். இறுதியில் அவர்களுக்கிடையில் சண்டையும் மூண்டது. ஸுஹ்ரா கோத்திரத்து ஸஅத், அவிசுவாசிகளில் ஒருவரை ஒட்டகத் தாடை எலும்பொன்றினால் தாக்கிக் காயப் படுத்தினார். இஸ்லாத்தின் பாதையில் முதன் முறை இரத்தம் சிந்தப்பட்டமை இதனால் ஏற்பட்டதாகும். எனினும் இச்சம்பவத்தின் பின்னர், அவர்கள் வன்செயல்களினின்றும் தம்மை தவிர்த்துக் கொள்ள முடிவு செய்தனர். ஏனென்றால் நபிகளாருக்கு வந்த இறைவசனங்கள் எல்லாம் பொறுமையைக் கடைப்பிடிக்கும்படி அடிக்கடி வற்புறுத்தலாயின. விசுவாசிகள் அவற்றை தமக்கும் உரிய கட்டளைகளாகவே கொண்டனர் :

“ அவர்கள் கூறுவதை சகித்துக் கொண்டு கண்ணியமான முறையில் அவர்களை விட்டு விலகி

இரும் ” - குர்ஆன்: 73:10


“ மேலும் இந்நிராகரிப்போருக்கு நீர் அவகாசமளியும். (அதிகமல்ல) ஒரு சொற்ப

அவகாசம் அவர்களுக்கு அளியும் ” - குர்ஆன்: 86:17

இரு சாராரைப் பொறுத்தமட்டிலும், இந்த வன்செயல் வழக்கத்துக்கு மாறானதொரு செய்கையாகவே இருந்தது. நபிகளார் தமது மதத்தை பகிரங்கமாகப் பிரகடனப் படுத்திய பின்னரும் கூட குறைஷிகள் அனைவரும் அன்னார் மீது பொறுமையைக் கடைப்பிடிக்கும் மனப்பாங்கினராகவே விளங்கினர். இவ்வாறான பொறைமை, நபிகளார் குறைஷியரது கடவுளரையும், நம்பிக்கைகளையும், கோட்பாடுகளையும், வழி வழி வந்த மரபுகளையும் கண்டிக்கத் தொடங்கும் வரை தொடர்ந்திருந்தது. கண்டனங்கள் உணரப்படத் தொடங்கியதும் குறைஷிகளின் தலைவர்கள் சிலை அபூதாலிபிடம் சென்று,

Friday, 30 November 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


“ எச்சரிக்கை செய்வீராக ”


இஸ்லாத்தில் சேர்ந்து கொள்ளப் பகிரங்கமான அழைப்புகள் ஏதும் இன்னும் விடுக்கப்படவில்லை. எனினும் பக்தியுணர்வுமிக்க விசுவாசிகளதும், தொழுகையாளர்களதும் எண்ணிக்கை பெருகிச் சென்று கொண்டிருந்தது. இருபாலருமான அவர்களுள் பெரும்பாலோர் இளைஞர்களாகவே விளங்கினர். ஏற்கனவே குறிப்பிடப்பட்டவர்கள் போக, ஆரம்ப விசுவாசிகளுள் நபிகளாரின் உடன் பிறவாச் சகோதரர்களான ஜஅபரும் ஸுபைரும் அடங்குவர். பின்னர் நபிகளாரதும், விசுவாசிகளனதும் உடன் பிறவாச் சகோதரர்கள் பலர் இணைந்து கொள்ளலாயினர் : நபிகளாரின் மாமியாரான உமைமாவின் புதல்வர் அப்த்-அல்லாஹ்-இப்ன்-ஜஹ்ஷ், அவரது சகோதரர் உபைத்-அல்லாஹ். மற்றுமொரு மாமியாரான பர்ராவின் மகன் அபூஸலமா ஆகியோர் அவர்கள். நபிகளாரின் தாயார் வழியிலான உடன் பிறவாச் சகோதரர்களும் சேர்ந்திருந்தனர் : ஸுஹ்ரா கோத்திரத்தின் அபூவக்காஸின் மகன் ஸஅத், அவரது இளைய சகோதரர் உமைர் ஆகியோர் அவர்கள். எனினும் நபிகளாரது தந்தையாரது சகோதரர்களுள் நால்வருள் எவருமே அன்னாரது தூதினை ஏற்க முன்வரவில்லை. அபூதாலிப் தனது இரு புதல்வர்களான ஜஅபரும் அலீயும் புதிய மதத்தினை பின்பற்றுவது குறித்து எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையாயினும், தனது மூதாதையரின் சமய நம்பிக்கைகளைக் கைவிட அவர் தயாராக இல்லை. அப்பாஸ் நழுவும் வகையில் பேசினார். ஹம்ஸா இதனை விளங்கிக் கொள்ள முடியாதவராயிருந்தார். என்றாலும் அப்பாஸும் ஹம்ஸாவும் தனிப்பட்ட முறையில் நபிகளாரின் மீதான தமது நெருங்கிய பந்தத்தை உறுதிப்படுத்தி நின்றனர். ஆனால் அபூலஹப் நேரடியாக, தனது சகோதரரின் மகன் ஒன்றில் தன்னைத் தான் ஏமாற்றிக் கொண்டுள்ளார் அல்லது பிறரை ஏமாற்றி வருகின்றார் என்ற தனது நம்பிக்கையை பகிரங்கமாகவே பேசி வந்தார்.


“ உம்முடைய நெருங்கிய பந்துக்களுக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ” - குர்ஆன்: 26:214

என்ற இறைவசனம் அருளப்பட்டதன் பின்னர் நபிகளார் அலீயை அழைத்து :

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


தொழுகை…( தொடர்… )



வானலோகத்திருந்தெழுந்த திடீர் அமைதி குறித்து ஆழ்ந்தகவலை கொண்டனர் நபிகளார். எனினும் இறைவசனங்களைப் பெற்றுக் கொள்ளும் பாரிய தாக்கத்தின் காரணமாக அன்னாரின் இதயம் இன்னமும் நடுங்குறுவதாயிருந்தது. இதன் தாக்கத்தை அல்லாஹ்வே இன்னும் இறக்கப்படாத குர்ஆன் வாசகத்தில் கூறுகின்றான்:

“ யாதொரு மலையின் மீதும் நாம் இந்தக் குர்ஆனை இறக்கி வைத்தால், அது

அல்லாஹ்வின் பயத்தால் நடுங்கி வெடித்துப் பிளந்துப் போவதை நிச்சயமாக நீர் கண்டிருப்பீர். ”

அல்குர்ஆன் : 59:21
( தன்மையிலிருந்து படர்க்கைகான சடுதியான மாற்றம் நாம்.......அல்லாஹ், குர்ஆனில் பரவலாக வருவது.)


என்னைப் போர்த்தும்! என்னைப் போர்த்தும்! என வேண்டிக் கொண்ட அன்னாரது நிலைமையின் உணர்வுகள் அடிக்கடி எழலாயின. ஒரு நாள் இரவு, தாம் போர்த்தியவராக இருந்த போது, அன்னாரின் தபிமையில், ஓர் இறைவசனம் அருளப்பட்டது. இது வரை அருளப்பட்டனவற்றுள் அவசரமானதாகவும் கடுமையானதாகவும், நியாயத் தீர்ப்பு நாள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கும் படியாகவும் அது வந்தது.

“ போர்த்தியிருப்பவரே! நீர் எழும்! (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்!

உமதிறைவனைப் பெருமைப்படுத்தும்! உமது ஆடைகளைத் தூய்மையாக வைத்துக்

கொள்ளும்! அசுத்தங்களை வெறுத்துவிடும்...

எக்காளம் ஊதப்படும் பட்சத்தில், அந்நாள் மிகக் கஷ்டமான நாளாகும். (அந்நாள்)

நிராகரிப்போர்க்கு எளிதானதன்று. ”. - அல்குர்ஆன் : 74 : 1-10

Thursday, 29 November 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

தொழுகை

இறுதி வாக்கியத்துக்கொப்ப வானவர், இறைவசனம் என்பன குறித்துத் தமது மனைவியின் பின்னர், தம்மோடு மிக நெருங்கியவர்களாகவும் அன்புடையவர்களாகவும் இருந்தோருக்குக் கூறலாயினர் நபிகளார். இந்த இரகசியத்தை வெளியிட்டு விடக்கூடாது என்பது தவிர வேறு எதனையும் அன்னார் அவர்களிடம் வேண்டவில்லை. எனினும் இந்நிலைமை அதிக காலம் நீடிக்கவில்லை.

ஜிப்ரீல் ஒரு நாள் மக்காவின் மேலுள்ள மேட்டு நிலத்தில் தோற்றமளித்து தனது குதிகாலை நிலத்தில் அமிழ்த்தினார். அவ்விடத்தேற்பட்ட குழியிலிருந்து நீர் பிரவேசிக்கத் தொடங்கியது. அதன் பின்னர், தொழுகையின் முன்னர் ஒருவர் அங்க சுத்தி செய்வதெப்படி என்பதனை ஜீப்ரீல் தானே செய்து காட்டினார். நபிகளார், அவரது முன்மாதிரியைப் பின்பற்றித் தாமும் அவ்வாறே செய்தார்கள். அதன் பின்னர் ஜிப்ரீல் தொழுகையின் வெவ்வேறு நிலைகளை - நிற்றள், குனிதல், கீழே விழுந்து வணங்குதல் என்பனவற்றை அல்லாஹு அக்பர் - அல்லாஹ்வே மிகப்பெரியவன் எனும் இறைபோற்றலுடன் செய்து காட்டி, இறுதியில் அஸ்ஸலாமு அலைக்கும்- உங்கள் மீது சாந்தியுண்டாவதாக எனும் சோபனத்துடன் முடித்தார். இவற்றையும் நபிகளார் பின்பற்றிச் செய்தார்கள். ஜிப்ரீல் அன்னாரை விட்டுச் செல்ல, நபிகளார் வீடு திருப்பித் தம் மனைவி கதீஜாவுக்குத் தாம் கற்றனவற்றைக் கற்பித்தார்கள். இருவரும் ஒன்றாகத் தொழுதனர். இப்போது நபிகளாரின் மதம் ஆசார முறையிலான சுத்திகரிப்பும் தொழுகையுமாக அமைந்தது. கதீஜாவின் பின்னர், புதிய மதத்தைத் தழுவியோர் அலீ, ஸைத், தையிம் கோத்திரத்தைச் சார்ந்தவரும் நபிகளாரின் நண்பருமான அபூ பக்ர் ஆகியோராவார். அலி பத்து வயதினராயிருந்தார். ஸைதுக்கு மக்காவில் எவ்வித செல்வாக்கும் இல்லை. ஆனால் அபூ பக்ர் மக்களால் விரும்பப்பட்டவராகவும் மதிக்கப்பட்டவராகவும் விளங்கினார். பரந்த அறிவும், எளிமையான குண நலன்களும், எவருடனும் ஒத்துச் செல்லும் போக்கும் உடையவராயிருந்தார் அவர். பல் வேறு விடயங்கள் குறித்தும் ஆலோசனை பெறவென அவரை நாடிப் பலரும் வருவர். தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களிடம் அவர், இரகசியமாக நபிகளாரைப் பின்பற்றும்படி கூறி வந்தார். இவ்வாறு ஆரம்பத்தில் அபூபக்கருக்குச் செவி மடுத்தோரில் இருவர் அப்த்-அம்ர், அபூ உபைதா ஆகியோர். ஸுஹ்ரா கோத்திரத்தவரான அப்த்-அம்ர், நபிகளாரின் தாயாரது தூரத்து உறவினரான அவ்ப் என்பவரின் மகன். பனீ-அல்-ஹாரித் கோத்திரத்து அல்-ஜர்ராவின் மகன்-அபூ-உபைதா.

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

ஆரம்ப இறைவசனங்கள்


பாரியதொரு பிரச்சினைக்கு முஹம்மத் மூலம் காணப்பட்ட சுமுகமான தீர்வு அவரது அதிகாரத்தினதும் தூதினதும் வெளிப்படையான குறிப்புகளை உணர்த்தி நின்றது.

நீண்ட காலம் கழியுமுன்னமேயே பலம் வய்ந்த அகக் குறிப்புகளையும் காணலானார் முஹம்மத். அவர் ஏற்கெனவே கொண்டிருந்த உணர்வுகளை உறுதிப்படுத்துவனவாக இவை அமைந்தன. இது குறித்து வினவப்பட்டபோது அவர் தனது உறக்கத்தில் எழும் ‘மெய்ம்மையான பிரமைகள்’ பற்றியும் அவை ‘உதய காலத்தெழும் ஒளியை ஒத்து’ இருந்தமை குறித்தும் விவரித்துக் கூறினார். - (ஸஹீஹ் புகாரி. 1.3) இவ்வாறான தோற்றங்களின் உடனடி விளைவாக அமைந்தது, தனிமையின் மீது அவருக்கு இருந்த விருப்பின் வலுப்பமாகும். இதனால் அவர் ஹிறா எனும் மலைக்குகைக்கு அடிக்கடி ஆன்மீக சிந்தையராய்ச் செல்லலானார். ஹிறாவும் மக்காவை அண்மியதோர் இடமே. 

இவ்வாறு அவர் செல்வது குறைஷியரைப் பொறுத்தளவில் புதுமையானதோர் அம்சமல்ல. ஏனெனில் ஆன்மீகத் தனிமை நாடிச் செல்வது இஸ்மாயீலின் சந்ததியினரிடையே மரபுவழி வந்ததொன்றாக இருந்தது. ஒவ்வொரு தலைமுறையிலும், மானிட லோகத்து அசூயைகளினின்றும் பிரிந்து நின்று தனிமையில் தவமியற்றச் செல்லும் சிலர் பண்டு தொட்டு இருந்து வந்தனர். தொன்று தொட்டு நிலவி வந்த இந்த மரபினைப் பின்பற்றி முஹம்மதும், தனக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு இறைவனின் தியானத்துக்கெனச் சில இரவுகளை ஒதுக்கியவராகத் தனிமையில் சென்று விடுவார். ஒதுக்கிய காலம் கழிய, தன் குடும்பத்தினரிடம் திரும்பி வருவார். 
சில போது மேலும் பொருட்களை எடுத்துக்கொண்டு மீண்டும் குகைக்குச் செல்வதுண்டு. கடந்த வருடங்களாக நகரை விட்டும் வெளியேறித் தனது தவமியற்றும் இடத்தை அவர் அண்மிச் செல்லும் போது, 

Wednesday, 28 November 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

கஃபாவின் புனரமைப்பு

கடைசியாகக் கண்ட நிகழ்ச்சிகளுக்குச் சிறிது முன்னர், அலீ குடும்பத்தவருள் ஒருவராக அமைந்த காலத்தின் போது, முஹம்மத் முப்பத்தைந்து வயதுடையவராக இருந்த நிலையில் குறைஷிகள் கஃபாவைப் புனர் நிர்மாணம் செய்ய முடிவு செய்தனர். 

கஃபா இருந்த நிலையில் அதன் சுவர்கள் ஒரு சாதாரண மனிதனது உயரத்தினவாகவே இருந்தன. கூரையேதும் இல்லை. அதனால் கதவுகள் மூடப்பட்ட நிலையிலும் அதன் உள்ளே செல்ல இயலுமாயிருந்தது. கட்டடத்தினுள் பெறுமதிவாய்ந்த பொருட்களைப் பாதுகாக்கவெனத் தோண்டப்பட்டிருந்த நிலவறையினின்றும் பல பொருட்கள் களவாடப்பட்டிருந்தன. கூரைக்கு வேண்டிய மரக்குற்றிகள் ஏற்கெனவே அவர்களிடம் இருந்தன. ஜெத்தாவுக்கு அண்மையில் கிரேக்க வர்த்தகரொருவரது கப்பலொன்று திருத்த முடியாத நிலையில் கரை தட்டியிருந்தது. அதன் பலகைகளைக் கூரை முகடுகளுக்குப் பயன் படுத்தவெனக் கொண்டு வந்திருந்தனர். இவ்வேளையில் நல்லதொரு தச்சரும் மக்காவில் இருந்தார். அவர் கொப்டிக் மதத்தவர். 
கஃபா குறித்துக் குறைஷியரிடையே இருந்த வியப்பும் அச்சமும் காரணமாக அதில் கைவைப்பதற்கு அனைவருமே தயங்கினர். அவர்களது திட்டம், வெறுமனே கற்களை அடுக்கி எழுப்பப்பட்ட சுவர்களை இடித்துப் புதிதாக உறுதியான சுவர்களை எழுப்புவதாகும். என்றாலும் இது இறைவிரோதச் செயலாயமைந்து விடுமென அவர்கள் அஞ்சினர். இவ்வாறான எண்ணத்தை உறுதிப்படுத்துவதாயமைந்தது கஃபாவின் உட்புறத்தில் வாழ்ந்துவந்ததொரு பெரும் பாம்பின் செய்கைகளாகும். தினமும் அது வெளியே வந்து கஃபாவின் சுவர்களிலிருந்து வெய்யிலில் காய்ந்து செல்லும். யாரேனும் அருகில் சென்றால் பயங்கரமாக படமெடுத்துச் சீறும். இது அனைவரையும் அச்சுறுத்தியது. எனினும் ஒரு நாள் அது வெளியே வந்து வெய்யில் காயும் போது இறைவன் ஒரு கழுகை அனுப்பி வைத்தான். அது பாம்பைப் பிடித்து பறந்து சென்றது. பின்னர் குறைஷியர் தமக்குள்ளே கூறிக் கொண்டனர் : 
“ இறைவன் எமது நோக்கங்களினால் நிச்சயமாகத் திருப்தியுற்றுள்ளான் என நாம் நம்பலாம். எங்களது எண்ணத்துக்கியைபவனாக ஒரு தச்சன் எம்மிடம் உள்ளான். பலகைகளும் எம்மிடம் இருக்கின்றன. இறைவன் எம்மைப் பாம்பிலிருந்தும் காப்பாற்றி விட்டான். ” 

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


இல்லத்தார் ( தொடர்…2 )

முஹம்மதின் பெரிய தந்தையருள் மூத்தவரும், மரணித்து விட்டவருமான ஹாரித் பல மக்களை விட்டுச் சென்றார். அவர்களுள் ஒருவர் அபூஸுப்யான். உடன் பிறவாச் சகோதரரான இவர் ஒருவகையில் முஹம்மதின் வளர்ப்புச் சகோதரரும் ஆவார். முஹம்மதின் பின்னர் சில வருடங்கள் கழித்து, பனீஸஅத் கோத்திரத்தின் ஹலீமாவிடமே பால் குடித்து வளர்ந்தவர் அபூஸுப்யான். மிகவும் நெருங்கிய ஒருமைப்பாடு இவர்களிருவரிடமும் காணப்பட்டதென்பர் அக்காலத்திய மக்கள். மிகவும் முக்கியமானதோர் அம்சம், இருவரும் பெற்றிருந்த சொல்வன்மையாகும். ஆனால் அபூஸுப்யானோ சிறந்ததோர் கவிஞனும் ஆவார். தனது சிறிய தந்தையரான ஸுபைர், அபூதாலிப் ஆகியோரையும் விடச் சிறந்ததொரு கவிஞனாயிருந்தார். முஹம்மத் கவிதை யாப்பதில் எப்போதுமே கவனம் செலுத்தியதில்லை. எனினும் அறபு மொழியிலும் சொல்வன்மையிலும் பாண்டித்தியம் பெற்றிருந்தார்.

ஓரளவு சம வயதுடையவராயிருந்த அபூஸுப்யானில் முஹம்மத் ஒரு நண்பனையும் சகாவையும் கொண்டிருந்தார். அத்தோடு இரத்த பந்தத்தில் மிக நெருங்கியவர்களாக இருந்தோர், தந்தையாரின் உடன் பிறந்த சகோதரியரின், அதாவது அப்த்-அல்-முத்தலிபின் ஐந்து மூத்த புதல்வியரது மக்கள். மாமியார் உமைமாவின் மக்கள் குறிப்பிடத்தக்கவர்கள். உமைமா, அறேபியாவின் வட பிரதேசத்து அஸத் கோத்திரத்தின் - (அஸத்-இப்ன்-குஸைமா, மக்காவில் வட கிழக்குப் பகுதியில், நஜ்த் வெளியின் வடஎல்லைப் பகுதியில் ஒரு கோத்திரம். இது வேறு, குறைஷிக் குலத்தின் அஸத் கோத்திரம் வேறு) -ஜஹ்ஷ் என்பாரை மணம் செய்திருந்தார். ஜஹ்ஷுக்கு மக்காவிலும் ஒரு வீடு இருந்தது. தனது சொந்த கோத்திரத்தினின்றும் வெளியே அமைந்த ஒரு கோத்திரத்தின் மத்தியில் வாழும் ஒருவர், பரஸ்பர ஒப்பந்த மூலம் அக்கோத்திரத்துடன் ஒன்றுபட்டவராக இணைந்து, அதன் பொறுப்புகளிலும் பங்கேற்று, சில உரிமைகளையும் பெற்றுக் கொள்ள முடிந்தது. அப்த்-ஷம்ஸ் - அப்த்-ஷம்ஸின் மகன். ஹர்பின் தந்தை உமையாவின் பெயரில் வழங்குவது. -கோத்திரத்தின் உமையாக் கிளையின் தலைவராக இருந்த ஹர்ப் என்பார் ஜஹ்ஷைத் தனது குழுவினருள் ஒருவராக ஏற்றிருந்தார். எனவே ஜஹ்ஷை மணந்து கொள்வதன் மூலம், உமைமா ஷம்ஸ் கோத்திரத்தார் ஒருவரையே மணந்தவராகின்றார். அவர்களது மூத்த புதல்வர் அப்த்-அல்லாஹ். முஹம்மதுக்குப் பன்னிரண்டு வயது குறைந்தவராயிருந்தாலும் இருவரிடையிலும் நெருங்கிய பந்தம் ஏற்பட்டிருந்தது. அப்த்-அல்லாஹ்வுக்குப் பல ஆண்டுகள் இளையவரான அவரது சகோதரி, உமைமாவின் மகள், பேரழகியாயிருந்த ஸைனபும் இப்பந்தத்துக்குள்ளாயிருந்தார். அவர்களது மிக்க இளம் பருவத்திருந்தே அவர்களை அறிந்து அவர்கள் மீது அன்பு செலுத்தி வந்தார் முஹம்மத். மற்றொரு மாமியார் பர்ராவின் மகன் அபூஸலாமாவும் ஆழ்ந்த அன்பு செலுத்தப்பட்டார்.

Tuesday, 27 November 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

இல்லத்தார் ( தொடர்…)


யாத்திரிகர்கள் வீடு திரும்பிய உடனேயே தனக்கு கிட்டிய நற்செய்தியுடன் ஹாரிதா தன் சகோதரர் கஅப்பைச் சென்று கண்டு இருவருமாக மக்காவுக்குப் புறப்பட்டனர்.

முஹம்மதிடம் சென்ற அவர்கள் எந்த ஒரு விலைக்காயினும் ஈடாக ஸைதை விடுவிக்கும்படி மிகப் பணிவுடன் வேண்டி நின்றார்கள். “ அவரே தெரிவு செய்யட்டும் ” என்றார் முஹம்மத். “ அவர் உங்களைத் தேர்ந்தால் எவ்விதப் பணயமும் இன்றி அவரை நீங்கள் கூட்டிச் செல்லலாம்; அவ்வாறின்றி அவர் என்னைத் தேர்ந்தாலோ! - என்னைத் தேர்ந்து கொண்டவருக்கு மேலாக எவரையும் நிலை நிறுத்தும் மனிதனல்ல நான் ” எனக் கூறிய அவர், ஸைதை அழைத்து, இம்மனிதர்கள் இருவரையும் அவர் அறிவாரா எனக் கேட்டார். “ இவர் எனது தந்தை. மற்றவர் எனது சிறிய தந்தை ” என்றார் ஸைத். “ என்னை உமக்குத் தெரியும். உம்முடன் நான் கொண்டுள்ள உறவினையும் நீர் அறிவீர். என்னிலும் அவர்களிலும் விரும்பியவரை நீரே தேர்ந்து கொள்வீராக ” என்றார் முஹம்மத். ஸைத் ஏற்கெனவே தேர்ந்திருந்தார். “ உமக்குப் பிரதிநிதியாக நான் எந்தவொரு மனிதனையும் தேர்ந்து கொள்ள மாட்டேன். எனக்குத் தந்தையாகவும் தாயாகவும் விளங்குபவர் நீரே! ” என்றார் அவர். “ தொலைந்து போவாயாக ஓ ஸைத்! சுதந்திரம், தந்தை, சிறிய தந்தை, குடும்பம் அனைத்துக்கும் மேலாக அடிமைத்தனத்தைத்தான் நீ விரும்புவாயா? ” என்றனர் கல்ப் கோத்திரத்தார். “ அவ்வாறேதான். இந்த மனிதரிடம் நான் கண்டு கொண்டவைகளின் காரணமாக, இவருக்கு மேலாக என்னால் எவரையும் தேர்ந்து கொள்ள முடியாது. ” என்றார் ஸைத்.

மேற்கொண்டு வார்த்தைகள் வளராமல் முஹம்மத், மூவரையும் கஃபாவுக்கு அழைத்து சென்றார். ஹிஜ்ரின் மீது நின்றவராக உரத்த குரலில் அவர் கூறினார் : “ ஸைத் எனது மகன் என்பதற்கு இங்கு குழுமியிருக்கும் அனைவரும் சாட்சி பகர்வீர்களாக! அவரது வாரிசு நான் - அவர் என்னுடையவர் ” - ( இ.ஸா. 3/1:28 )

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

இல்லத்தார்

மணவாளர் தனது பெரிய தந்தையார் வீட்டை விட்டு மணாளியின் வீட்டுக்கே குடியிருக்கச் சென்றார். கதீஜா மனைவியாக மட்டுமன்றி, ஒரு நண்பராக, கணவரின் எண்ணங்கள் அபிலாஷைகள் என்பவற்றில் சிறந்ததொரு பங்கினை வகித்தவராக விளங்கினார். அவர்களது திருமண வாழ்வு ஆசீர்வதிக்கப்பட்டதாக, மிக்க மகிழ்ச்சி நிறைந்ததாக அமைந்தது. இழப்புகளினாலான துயரங்களும் இருக்கத்தான் செய்தன. கதீஜா மூலம் முஹம்மதுக்கு ஆறு குழந்தைகள் கிடைத்தனர். அவர்களுள் இருவர் ஆண்கள். மூத்த குழந்தை காஸிம் எனப் பெயரிடப்பட்ட மகன். முஹம்மத், ‘ அபுல் காஸிம் ’ - காஸிமின் தந்தை - என அழைக்கப்பட்டார். எனினும் காஸிம் இரண்டு வயதை அடையுமுன்னரே காலமாகிவிட்டார். இரண்டாவது குழந்தை ஸைனப் என்ற புதல்வி. அவருக்குப் பின்னால் வந்த மூவரும் பெண்கள். ருகையா, உம்ம் குல்தூம், பாத்திமா ஆகியோர். இறுதியாகப் பிறந்த மகனும் குறுகிய காலமே வாழ்ந்தார்.


தனது திருமண நாளின் போது தந்தையாரிடமிருந்து தான் பெற்றிருந்த அன்பு நிறைந்த பணிப்பெண்ணான அடிமை பரகாஹ்வை முஹம்மத் விடுதலை செய்து விட்டார். அதே தினம் கதீஜா தனது சொந்த அடிமைகளிலிருந்து ஒருவரைத் தனது கணவருக்கு அன்பளிப்புச் செய்தார். பதினைந்து வயது நிரம்பியவராயிருந்த ஸைத் அவர். பரகாஹ், யத்ரிப் நகர வாசி ஒருவருக்கு மணஞ் செய்து கொடுக்கப்பட்டார். அவர்களுக்கு ஒரு மகன் கிடைத்தார். அதன் பின்னர் பரகாஹ் ‘ உம்ம் அய்மன் ’ - அய்மனின் தாய் - என்றே வழங்கப்பட்டார். கதீஜாவின் சகோதரர் ஹிஸாம் என்பாரின் மகன் ஹகீம், அண்மையில் உக்காஸ் சந்தையில் வைத்து விலை கொடுத்து வாங்கியிருந்த சில இளைஞர்களுள் ஒருவரே ஸைத். மாமியார் தனது வீட்டுக்கு வருகை தந்தபோது, ஹகீம் தனது புதிய அடிமைகளை அழைத்து, விருப்பமான ஒருவரைத் தெரிந்து கொள்ளும்படி அவரை வேண்டினார். கதீஜா ஸைத்தைத் தேர்ந்து கொண்டார்.

Monday, 26 November 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

திருமண எண்ணங்கள் (தொடர்…)

தொடர்ந்து ஸிரியா செல்லும் வழியில், மைஸராவின் மனதில் நெஸ்டோரின் வாக்கு ஆழமாக பதியலாயது. என்றாலும் அவ்வார்த்தைகள் மைஸராவுக்குப் பெரும் ஆச்சரியங்களெதனையும் ஊட்டுவதாக இல்லை. ஏனெனில் தான் இதுவரை கண்டவர்கள் அனைவரிலும் முற்றும் வித்தியாசமான ஒருவருடனேயே பிரயாணம் செய்து வருவதனை முழு பிரயாணத்தின் போதும் மைஸராவால் உணர்ந்து கொள்ள முடிந்தது. திரும்பி வரும் வழியில் அவர் அவதானித்ததோர் அம்சம் இந்நம்பிக்கையை நன்கு வேரூன்றச் செய்தது. பல சந்தர்ப்பங்களில் பாலையின் வெம்மை, மிகவும் புதுமையானதொரு வகையில், துயருறுத்துவதாக அமையாமையை அனுபவித்து வந்த மைஸரா, ஒரு நாள் பகல் போது நெருங்குகையில் குறுகிய ஆனால் தெளிவானதொரு காட்சியைக் கண்டார். வானவர்களிருவர் சூரியனது கதிர்களினின்றும் முஹம்மதுக்கு நிழல் அளித்துக் கொண்டிருந்தனர்.


தமது பொருட்களின் விற்பனவு மூலம் கிடைத்த பணத்துக்கு ஸிரியாவின் சந்தையில் வாங்கிய பொருட்களோடு, மக்காவையடைந்ததும் கதீஜாவிடம் சென்றனர் இருவரும். தனது பிரயாணம் வர்த்தக விவகாரங்கள் என்பன குறித்து முஹம்மத் அளித்து வந்த விளக்கத்தை கதீஜா அமர்ந்திருந்து மிக அவதானமாகக் கேட்டு வந்தார். இந்த வர்த்தகப் பிரயாணம் கதீஜாவுக்கு அதிக லாபத்தை ஈட்டி தருவதாக இருந்தது. ஸிரியாவில் வாங்கப்பட்ட பொருட்களை மக்காவில் இரு மடங்கு விலைக்கு விற்றுக் கொள்ளக் கூடியதாயிருந்தது. எனினும் வர்த்தக லாப நஷ்டங்கள் ஏதும் அவரது சிந்தனையில் ஆழமாகப் பதியவில்லை. இளமையும், அழகும், கம்பீரமும், நேர்மையும் அருள் நிரம்பிய தோற்றமும் கொண்டவராயிருந்த தனது வர்த்தகப் பிரதிநிதியையே அவதானித்தவராக இருந்தார் அவர். முஹம்மத் இருபத்தைந்து வதுடையவராக இருந்தார். கதீஜாவின் சிந்தனையில் பல்வேறு எண்ணங்கள் எழலாயின. தான் இன்னமும் அழகு குன்றாதவராக இருப்பதனை அவர் உணர்ந்திருந்தார். ஆனால் தான் பதினைந்து வருடங்களால் மூத்தவர். இந்நிலையில் தன்னை மணந்து கொள்ள அவர் முன் வருவாரா?

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


திருமண எண்ணங்கள்


முஹம்மத் தனது இருபதாவது வயதைக் கடந்திருந்தார். காலஞ் செல்ல செல்ல, வர்த்தகத்துக்கென வெளிப் பிரதேசங்கட்குச் சென்று வந்த அவரது உறவினர் பலரும் அவரையும் உடன் அழைத்துச் செல்லலாயினர்.

ஒரு முறை பிரயாணம் செய்து கொள்ள இயலாவதாயிருந்த ஒரு வர்த்தகரது பொருட்கள் அனைத்தையும் இவரே பொறுப்பெடுத்துச் செல்ல வேண்டியேற்பட்டது. வெற்றிகரமானதொன்றாக அமைந்த அவ்வர்த்தகப் பிரயாணத்தின் பின்னர் அது போன்ற பொறுப்புகள் பல அவரை நாடி வரலாயின. இவற்றால் வாழ்க்கை வசதிகளும் கூடவே, திருமணம் செய்து கொள்ளக்கூடுய சாதகமும் உருவாகியது.




அப்போதைய நிலையில் அவரது பெரிய தந்தையாரும் பாதுகாவலருமான அபூதாலிபுக்கு மூன்று புதல்வர்கள் இருந்தனர். மூத்தவர் தாலிப், முஹம்மதின் வயதினராகவும். அகீல் பதின்மூன்று அல்லது பதினான்கு வயதுடையவராகவும் இருந்தனர். ஜஅபர் நான்கே வயதான சிறுவர். அழகும் புத்தி சாதுரியமும் மிக்க ஜஅபருடன் முஹம்மத் கொண்டிருந்த உறவு நெருங்கியதாயிருந்தது. தனது ஒன்று விட்ட சகோதரனது அன்புக்கு ஜஅபர் எப்போதும் பக்தி சிரத்தையுடனான மாறா மதிப்பை அளித்து வந்தார்.

Friday, 16 November 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

சிறப்பு மிக்கதோர் ஒப்பந்தம்



ஸிரியாவில் தனது வர்த்தக நடவடிக்கைகளை முடித்துக் கொண்ட அபூதாலிப், தனது தம்பி மகனுடன் மக்கா வந்து சேர்ந்தார். முன்னர் போலவே சிறுவரும் தனது தனிமை வாழ்வைத் தொடரலானார். அப்பாஸ், ஹம்ஸா ஆகியோரைப் போல, இவரையும் யுத்த ஆயுதங்களை உபயோகிக்கப் பழக்கினர் பெரிய தந்தையர். ஹம்ஸா இயல்பாகவே பெரிய உருவத்தினராக, மிக்க உடல் வலிமை வாய்ந்தவராக விளங்கினார். வாள் வீச்சிலும் மல்யுத்தத்திலும் சிறந்திருந்தார் அவர். சாதாரண உயரத்தினராகவும், சாதாரண பலம் வாய்ந்தராகவும் விளங்கிய முஹம்மத், வில் வித்தையில் கைதேர்ந்தவராயிருந்தார். தமது முன்னோர் இப்றாஹீம், இஸ்மாயீல் போல சிறந்த வில் வீரனாக வரும் தகைமைகள் அனைத்தும் கொண்டிருந்தார் அவர். அவருடைய பார்வைத் திறன் இதற்குத் தக்கதொரு துணையாக நின்றது. ப்ளயாடெஸ்ஸின் உடுத்தொகுதியில் பன்னிரண்டுக்குக் குறையாத நட்சத்திரங்களை எண்ணக் கூடியவர் எனப் பெயர் பெற்றிருந்தார் அவர்.

இந்த வருடங்களில் குறைஷிகள் எந்தவொரு பெரிய யுத்தங்களிலும் ஈடுபட்டிருக்கவில்லை. ‘ புனிதமிக்க யுத்தம் ’ என்ற பெயரில் சிறிய கலவரங்களும், தாக்குதல்களுமே தொடர்ந்து வந்தன. புனித மாதங்களின் போது ஆரம்பித்தமையாலேயே இந்த யுத்தத்துக்கு அப்பெயர் வழங்கியது. கினானா கொத்திரத்தைச் சார்ந்த துன்மார்க்கனான ஒருவன், கபடமான முறையில், நஜ்தின் ஹவாஸின்களது ஆமிர் கோத்திரத்தவர் ஒருவரைக் கொலை செய்து விட்டான். பின்னர், அவன் கைபர் பிரதேசத்தில் இலகுவில் ஊடுருவ முடியாததொரு கோட்டைக்குள் அடைக்கலம் புகுந்து கொண்டான். தொடர்ந்து நடந்த சம்பவங்கள் வழக்கமான பாலை நில மரபுகளையே கொண்டிருந்தன.
கெளரவம் பழிவாங்குதலை வேண்டி நின்றது. எனவே மரணமுற்றவனது கோத்திரத்தார் கொலைகாரனைக் கொண்ட கினானாவைத் தாக்கினர். ஓரளவு மதிப்பிறங்கிய வகையில், குறைஷியரும் கினானாவின் சார்பாக இதில் கலந்து கொண்டனர். 

இந்தப் பிரச்சினை மூன்று அல்லது நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்தது. எனினும் உண்மையான யுத்தம் நடந்தது மொத்தம் ஐந்து நாட்கள் மாத்திரமே. ஹாஷிம் கோத்திரத் தலைவராக அப்போதிருந்தவர் ஸுபைர். அபூதாலிபைப் போல இவரும் முஹம்மதின் தந்தை அப்த்-அல்லாஹ்வின் ஒரு தாய் வயிற்றுச் சகோதரர். ஸுபைரும் அபூதாலிபும் தமது தம்பி மகனை இந்த யுத்த ஆரம்பத்தின்போது கூட்டிச் சென்றனர். எனினும் அவர் மிகவும் இளையவராக இருந்தமையினால் யுத்தத்திலீடுபடுத்தப்படவில்லை. எதிரிகளின் அம்புகளில் குறி தவறியனவற்றினைப் பொறுக்கி மீண்டும் எறியவென தமது பெரிய தந்தையரிடம் எடுத்துக் கொடுக்கும் பணியில் மட்டும் அவர் ஈடுபடுத்தப்பட்டார். - (இ.ஹி 119) 

பின்னைய யுத்தங்களில் ஒன்றன்போது குறைஷியரும் அவர்களைச் சார்ந்தோரும் தோல்வியுறக்கூடியதொரு நிலையில் இருந்தபோது அவர் வில்லெறிய அனுமதிக்கப்பட்டார்: அவரது திறமையும் வீரமும் பெரிதும் புகழப்பட்டன - ( இ.ஸா 1/1:81)


நிலையான குடியமைப்பைக் கொண்டிருந்தவர்கள், பாலை நில மரபுகள் மதிப்பீடொன்றனை மேற்கொள்ளவும், அதன் வழி வந்த தமது எண்ணங்களை பிறரிடையே பரப்பவும் இந்த யுத்தம் துணை செய்தது. குறைஷிகளின் தலைவர்களில் பலர், ஸிரியா சென்று, ரோம சாம்ராச்சியத்தின் நீதி முறைகள் பற்றித் தெரிந்திருந்தனர். அபிஸீனியாவிலும் யுத்தங்களின்றியே நீதி பெறக் கூடுமாயிருந்தது. ஆனால் அறேபியாவில், பாதிப்புக்குள்ளானவரோ அல்லது அவரது குடும்பத்தாரோ நீதி பெற எந்தவிதமான சட்ட விதிமுறைகளும் இல்லை. எனவே இப்புனிதமிழந்த யுத்தமும், முன்னைய பல போராட்டங்களில் போலவே, இவ்வாறானதொரு நிலைமை மீண்டும் மீண்டும் ஏற்படாதிருக்க ஆவன செய்ய வேண்டுமென்ற எண்ணத்தைப் பலரிடையேயும் வலுப்படுத்துவதாய் அமைந்தது. ஆனால் இம்முறை, முடிவுகள் வெறுமனே சிந்தனைகளுடனும் வார்த்தைகளுடனும் நின்று விடவில்லை. குறைஷிகளைப் பொறுத்தமட்டில் இவ்வாறான பிரச்சினைகட்கு நிலையான தீர்வொன்றனைக் காணும் எண்ணம் உறுதியாயிற்று.


நீதி பற்றிய அவர்களது உணர்வினைப் பரிசீலிக்கும் நிகழ்ச்சியொன்று இந்த யுத்தம் முடிந்த ஒரு சில வாரங்களுக்குள் நடந்தது.

யெமன் துறைமுகமான ஸாபித்திலிருந்து வந்த ஒரு வர்த்தகர், சில பெறுமதி வாய்ந்த பொருட்களை ஸஹ்ம் கோத்திரத்தவர் ஒருவருக்கு விற்பனை செய்தார். இவற்றைப் பெற்றுக் கொண்ட அந்த ஸஹ்மி பின்னர் தான் ஒப்புக் கொண்ட தொகையைக் கொடுக்காது மறுத்து விட்டார். ஏமாற்றப்பட்ட அந்த வர்த்தகர் மக்காவுக்குப் புதியவர். தான் உதவிக் கோரிச் செல்ல யாரையும் அறியாதவர். அவர் தொடர்பு கொண்டிருந்த எந்த ஒரு கோத்திரமும் அங்கில்லை. இவையனைத்தையும் அந்த ஸஹ்மீ நன்கறிந்திருந்தார். எனினும் அந்த யெமன் வாசி தளர்ந்து விடுவதாக இல்லை. அபூ குபைஸ் குன்றின் மீதேறி, குறைஷிகள் அனைவரையும்விளித்து, மிகவும் உக்கிரமமான முறையில் அவர் நீதி கோரி நின்றார். ஸஹ்ம் கோத்திரத்தவரோடு மரபு ரீதியாக ஒப்பந்தங்கள் ஏதும் செய்திராத கோத்திரங்கள் பலவும் உடனடியாகவே இப்பிரச்சினைக்கு முடிவு காண முன் வந்தன. 
கோத்திரப் பிரிவினைகள் எவ்வாறிருந்தாலும் குறைஷிகள் அனைவரும் ஒற்றுமைப்பட்டிருப்பதில் கூடிய கவனம் செலுத்தினர்.என்றாலும் அவர்களை முன்னர் பிரித்து வைத்திருந்த சம்பவம் இன்னும் அடிமனத்தில் இருக்கத்தான் செய்தது. குஸையின் பின்னர், குறைஷிக் குலத்தார் வாசனையாளர்கள், கூட்டுறவாளர்கள் எனப் பிரிந்திருந்த சம்பவமே அது. ஸஹ்ம் கோத்திரத்தார் கூட்டுறவாளர்களைச் சார்ந்தோராயிருந்தனர். வாசனையாளர்களது குழுவின் அப்போதைய தலைவர்களுள் ஒருவர், தையிம் கோத்திரத்து தலைவராயிருந்த அப்த்-அல்லாஹ்-இப்ன்-ஜூத்ஆன். நீதியை விரும்பும் அனைவரும் கலந்துரையாடக் கூடியதொரு சபா மண்டபமாகத் தனது வீட்டையளிக்க முன்வந்தார் அவர். வாசனையாளர்களுள் அப்த்-ஷம்ஸ், நவ்பல் கோத்திரத்தவர்கள் மாத்திரமே அதில் கலந்து கொள்ளாதிருந்தனர். ஹாஷிம், முத்தலிப், ஸுஹ்ரா, அஸத், தையிம் ஆகிய கோத்திரங்கள் நன்கு பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டிருந்தன. கூட்டுறவாளர் பிரிவிலிருந்து அதீ கோத்திரத்தாரும் கலந்து கொண்டனர். 
நல்லதொரு கலந்துரையாடலின் பின்னர், பலமிழந்தவர்களைப் பாதுகாக்கவும், நீதியை நிலை நிறுத்தவும் வீரியம் பொருந்தியதோர் ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அனைவருமாக கஃபாவுக்குச் சென்றனர். கருநிறப் பாறையின் மீது நீரை ஊற்றி, வடியும் நீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து, அதனை புனித நீர் எனக் கொண்டு ஒவ்வொருவரும் சிறிது சிறிதாக அருந்தினர். பின்னர் தமது வலக்கரத்தை தலையின் மீது உயர்த்தியவர்களாகச் சபதமொன்று செய்தனர். அன்று முதல், மக்கா நகரில் எந்த ஓர் அநீதியிழைக்கப்பட்டாலும் பாதிக்கப்பட்டவருக்குச் சார்பாக தாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நீதி நிலைபெறும் வரை பாதித்தவருக்கெதிராக நிற்பர் என்பதே அது. பாதிக்கப்பட்டவர் குறைஷிக் குலத்தவராயினும் சரி, வெளியே இருந்து வந்தவராயினும் சரியே. 

பின்னர் ஸஹ்மீ தனது கடனைச் செலுத்தப் பலவந்தப்படுத்தப்பட்டார். இவ்வொப்பந்தத்தில் கலந்து கொள்ளாத கோத்திரங்கள் கூட ஸஹ்மிக்கு ஆதரவாக முன் வரவில்லை.

தையிம் தலைவரோடு, ஹாஷிம் கோத்திரத்து ஸுபைர் இவ்வேற்பாட்டின் கர்த்தாக்களில் ஒருவராயிருந்தார். அவர், தமது தம்பியின் மகன் முஹம்மதையும் இவ் ஒப்பந்தத்திற்கு அழைத்து வந்திருந்தார். இச்சபதத்தின் போது பங்கு பெற்ற முஹம்மத் பின்னர் ஒரு காலத்தில் கூறினார்: “ அப்த்-அல்லாஹ்-இப்ன்-ஜுத்ஆனுடைய இல்லத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த உன்னதமான ஒப்பந்தத்தின்போது நானும் பிரசன்னமாயிருந்தேன். செந்நிற ஒட்டகக் கூட்டம் ஒன்றைப் பிரதியாக தருவதாயிருப்பினும் நான் அதிலிருந்து விலகிக் கொள்ள மாட்டேன். இப்போது இஸ்லாத்தில் இருக்கும் நான் அதில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டாலும் மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக் கொள்வேன் ” -(இ.இ. 86)

அங்கு வந்திருந்தவர்களில் ஒருவர், ஜுத்ஆனின் ஒன்றுவிட்ட சகோதரர், தையிம் வம்சத்தவரேயான அபூ-குஹாபா, அவர் தன்னுடன், முஹம்மதிலும் இரண்டு வயது இளையவராயிருந்த தனது மகனையும் அழைத்து வந்திருந்தார். முஹம்மதின் மிக நெருங்கிய நண்பராக அமையவிருந்தார், அபூ-குஹாபா கூட்டி வந்த மகன் அபூபக்ர்.


இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

பஹீரா...

அப்த்-அல்-முத்தலிபின் இறுதிக் காலப் பகுதியில் அவரின் செல்வ வளமும் குன்றிச் சென்றிருந்தது. அவர் தனது மக்களுக்கு விட்டுச் சென்றனவும் சிறியனவாகவே இருந்தன. அவர்களுள் சிலர், சிறப்பாக அபூலஹப் என வழங்கப்பட்ட அப்த்-அல் உஸ்ஸா முதலியோர் சொந்தமாகவே பெரும் செல்வம் சேகரித்திருந்தனர். அபூதாலிப் ஏழையாகவே இருந்தார். எனவே அவரது தம்பி மகன் முஹம்மதும் தன் ஜீவியத்துக்காகத் தன்னால் இயன்றளவு சுயமாகச் சம்பாதிக்க வேண்டியவராயிருந்தார். ஆடுகள் மேய்க்கும் தொழிலிலேயே அதிகம் ஈடுபட்ட சிறுவர், மக்காவைச் சூழவுள்ள மலைகளிலும், சுற்றுப் புறங்களிலும் பல நாட்களைத் தனிமையிலேயே கழித்து வரலாயினார். அபூ தாலிப் தனது பிரயாணங்களின் போது, சிறுவரை நகருக்கு வெளியே கூட்டிச் செல்வதையும் வழக்கமாய்க் கொண்டிருந்தார். இவ்வாறுதான் ஒரு முறை முஹம்மத் ஒன்பது வயதுடையவராக இருந்த போது,- சிலர் பன்னிரண்டு வயதென்பர் - அவர்கள் ஒரு வர்த்தகக் குழுவுடன் ஸிரியா வரை சென்றனர்.  

போஸ்த்தராவுக்கு அருகில் வழக்கமாக மக்கத்து வர்த்தகக் குழுக்கள் தங்கிச் செல்லும் இடத்துக்கருகே ஒரு மடம் இருந்தது. தலைமுறை தலைமுறையாக அங்கே ஒரு கிறிஸ்தவ மதகுரு வாழ்வது வழக்கம். ஒருவர் இறந்தால் மற்றொருவர் அங்கு இடம்பெறுவார். மடத்தின் அனைத்துப் பொருட்களும் பழம் ஏட்டுச் சுவடிகளும் மதகுருவின் பொறுப்பிலேயே இருந்து வந்தன. இந்த ஏட்டுச் சுவடிகளில் ஒன்று, அறபிகளுக்கு ஓர் இறைதூதர் வருவதனை முன்னறிவிப்புச் செய்வதாக இருந்தது. தற்போது அம்மடத்தில் வாழ்ந்து வந்த பஹீரா, இச்சுவடிகளை நன்கு கற்றறிந்தவராகவும் அவற்றில் தீவிர ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கினார். வரகாஹ்வைப்போல இவரும், தனது வாழ்நாளுக்குள்ளேயே இவ்விறை தூதர் தோற்றம் பெறுவார் என்ற ஒரு நம்பிக்கையைக் கொண்டிருந்தார்.

Thursday, 15 November 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

இரு துயர்கள்

ஹலீமாவும் ஹாரிதும் சிறுவர்கள் உண்மையே பேசுகின்றார்கள் என உறுதி கொண்டனர். எனவே விளைவுகளை எண்ணி அவர்கள் சஞ்சலம் கொள்ளலானார்கள். தமது வளர்ப்பு மகன் தீய ஆவியினால் அல்லது ஏதோ ஒரு சூனியத்தினால் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றார் என்றே ஹாரித் நம்பினார். அதன் தாக்கங்கள் தெளிவாகு முன்னர் விரைவாக சிறுவரை அவரது தாயாரிடம் கொண்டு சேர்க்கும்படி ஹலீமாவை வேண்டினார் அவர். 

ஹலீமா சிறுவரைக் கூட்டிக் கொண்டு மக்கா சென்றார். தனது மன மாற்றத்தின் காரணத்தையோ, உண்மையில் நடந்த சம்பவத்தையோ ஆமினாவிடம் கூறும் நோக்கம் அவருக்கில்லை. என்றாலும் ஹலீமாவின் சடுதியான மாற்றம் ஆமினாவுக்கு திருப்தி தராது போகவே, ஹலீமா உண்மையை, நடந்த விடயங்கள் அனைத்தையும் தெளிவாகக் கூறினார். பின்னர் ஆமினா கூறினார் : “ எனது சிறிய மகனுக்கு மாபெரும் எதிர்காலம் ஒன்று காத்திருக்கின்றது ” இது ஹலீமாவின் அச்சத்தைத் தீர்த்து வைப்பதாயிருந்தது. தொடர்ந்து தான் கர்ப்பமுற்றிருந்த காலத்து அனுபவங்களை, தன்னுள் ஓர் ஒளியை ஏந்தி நிற்கும் உணர்வு கொண்டிருந்த தன்மையை ஆமினா விளக்கினார். ஹலீமா ஆறுதலடைந்தார். என்றாலும் இம்முறை ஆமினா மகனைத் தன்னிடமே வைத்துக்கொள்ள முடிவு செய்தார். “ அவரை என்னிடமே விட்டு விடும்; உமது பயணம் நல்லதாக அமையட்டும் ” என்றார் ஆமினா.


சிறுவர் மூன்று வருட காலமளவு, மக்காவிலேயே தனது தாயாருடன் மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து வந்தார். பாட்டனார், மாமன்மார், மாமியர், விளையாட்டுத் தோழர்களாயிருந்த ஒன்று விட்ட சகோதரர்கள், ஏனைய உறவினர்கள் முதலிய அனைவரதும் அன்பைப் பெற்றவராக அவர் விளங்கினார். குறிப்பாக அவருடன் மிக நெருங்கியவர்களாக இருந்தவர்கள் ஹம்ஸாவும் ஸபிய்யாவும் ஆவர். இவர்கள் இருவரும் அப்த்-அல்-முத்தலிபின் கடைசித் திருமணத்தின் மூலம் கிடைத்த குழந்தைகள். அத்திருமணமும், சிறுவரின் தந்தை அப்த்-அல்லாஹ்வின் திருமணமும் ஒரே தினத்திலேயே நடந்திருந்தன. ஹம்ஸா, இச்சிறுவரது வயதினராகவே இருந்தார். ஸபிய்யா சற்றே இளையவர். தந்தை வழியில் அவர்கள், சிறிய தந்தையும் மாமியாரும் ஆவர். தாய் வழியிலோ அவர்கள் ஒன்று விட்ட சகோதரரும் சகோதரியும் ஆவர். இம்மூவரிடையிலும் பலம் வாய்ந்த ஆழமானதொரு பந்தம் ஏற்பட்டது.

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

பாலை…(தொடர்…)

குழந்தையின் தாய் ஆமினாவோ வறுமையில் வாழ்பவர். குழந்தையோ, செல்வமெதனையும் சேகரித்து வைக்கும் வயதை அடையுமுன்னமேயே இறந்து போன ஒரு தந்தையின் மகன்.

அப்த்-அல்லாஹ் தன் மகனுக்கு விட்டுச் சென்றவை ஐந்து ஒட்டகங்கள். சிறியதோர் ஆட்டுமந்தை. ஓர் அடிமைப் பெண். உண்மையிலேயே அப்த்-அல்லாஹ்வின் மகன் பெரியதொரு குடும்பத்தில் உதித்தவர்தான். ஆனால் அந்த வருடம் இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆக வறுமையான குழந்தையாகவே அவர் விளங்கினார்.

மறுபுறம், செவிலித்தாய் - தந்தையர் செல்வந்தர்களாகவே இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படாவிடினும் அவர்கள் வறுமையில் வாடாதவர்களாக இருக்க வெண்டும் என்று நிச்சயம் எதிர்பார்க்கப்பட்டனர்.


ஹலிமாவும் கணவரும் ஏனையோரைப் பார்க்கிலும் வறியவர்களென்பது உறுதியாக இருந்தது. ஹலீமாவுக்கும் வேறொரு பெண்ணுக்கும் இடையில் தெரிவு நடந்தால், அடுத்தவளே எப்போதும் விரும்பப்பட்டாள். ஹலீமாவைத் தவிர்த்து, பனீ ஸஅத் பெண்கள் அனைவருமே ஒவ்வொரு குழந்தையைப் பெற்றுக்கொண்டனர். அதிக ஏழையாயிருந்த செவிலிக்கு மட்டுமே ஒரு குழந்தையில்லை; அதிக ஏழையாயிருந்த குழந்தைக்கு மட்டுமே ஒரு செவிலி இல்லை.

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

பாலை

ஆண் குழந்தைகளைப் பிறந்த சில காலத்துள் பாலைவனத்துக்கு அனுப்பி வைக்கும் ஒரு வழக்கம் அறாபிய நகரங்களது பெருங்குடும்பங்கள் மத்தியில் இருந்து வந்தது. இளம் பருவத்தை நாடோடிக் கோத்திரத்தாரிடையே கழிப்பதற்காக, பால் குடி மறக்கும் காலம் வரையிலும் குழந்தைகளைச் செவிலித் தாயரிடம் ஒப்படைத்து விடுவர். 

மக்க நகர் வாசிகளும் இதற்கு விதி விலக்கானவர்களல்ல. தொற்று நோய்கள் இலகுவாகப் பரவும் இடங்களுள் ஒன்றாயிருந்த மக்காவில் குழந்தைகள் இறப்பு விகிதமும் அதிகமாயிருந்தது. தமது புதல்வர்கள் பாலை நிலத்தின் தூய காற்றினை நுகரவேண்டும் என்பது மாத்திரம் அவர்களது நோக்கமாக இருக்கவில்லை. அது அவர்களது உடலுக்கு நல்லது. அதற்கும் மேலாகப் பாலை நில வாழ்வு ஆன்மாவுக்கும் பல பயன்களை நல்குவதாயமைந்தது. குறைஷியர் மிக அண்மையிலேயே நகரமைப்பிலான வாழ்வினைப் பின்பற்றத் தொடங்கியிருந்தனர்.


குஸை புனிதத் தலத்தினைச் சுற்றிவர வீடுகளை அமைத்துக் கொள்ளும்படி குறைஷியரை வேண்டிக் கொண்ட காலம் வரையும், அவர்கள் பொதுவாக நாடோடி வாழ்க்கையே வாழ்ந்து வந்தனர். நிலையான குடியமைப்பு வசதிகள் தவிர்க்க முடியாதனவே. எனினும் அவை ஆபத்தானவையுங்கூட. தம் முன்னோர் வாழ்க்கை தான் எத்துணை பெருமை வாய்ந்ததாக இருந்தது! கூடார வாழ்க்கை எப்போதும் வேறு இடங்கள் நோக்கிய பெயர்வு. பெருமித வாழ்வும் சுதந்திரமும் இணைபிரியாது அமைந்திருந்தன.

நாடோடி எப்போதும் சுதந்திரமானவனே. பாலை நிலத்தில் மனிதன், தான் பிரபஞ்சத்தின் எஜமானன் என்ற உணர்வைப் பெற்று வந்தான். இவ்வாறானதொரு தன்மையினால் காலத்தின் ஆதிக்கம் பற்றிய உணர்விலிருந்தும் அவன் தப்பி வாழ முடிந்தது.

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

யானை வருடம்…(தொடர்…)

கஃபாவை அழிக்கவென மக்காவில் புகுவதும், கருமம் முடிய, வந்த வழியே ஸன்ஆவை நோக்கித் திரும்பி புறப்படுவதுமே அடுத்த நாள் காலைக்குறிய அப்ரஹாவின் திட்டமாக இருந்தது.

யானை பூரண அலங்காரங்களுடன் படையினரின் முன்னால் கொண்டு செல்லப்பட்டு மக்காவை நோக்கி நிறுத்தப்பட்டது.

ஆரம்பத்திலிருந்தே தயக்கம் நிறைந்தவராக இருந்த நுபைல், படையினரின் முன்னால் உனைஸுடனேயே பெரிதும் வந்து கொண்டிருந்தார். அதனால் யானையைக் கட்டுப்படுத்தும் சொற்கள் பலவற்றையும் அவரால் கிரகித்துக் கொள்ள முடிந்தது. படை முன்னேறிச் செல்வதற்கான கட்டளையை எதிர் நோக்கி உனைஸ் திரும்பியிருந்த சந்தர்ப்பத்தில் நுபைல், யானையின் காதொன்றைப் பிடித்து, அதனை முழந்தாலிட்டுத் தாழ்ந்து நிற்கும்படி அமைதியான, தீர்க்கமான கட்டளையொன்றனை இட்டார். 

யானை மெதுவாக நிலத்தில் அமர்ந்து கொண்டமை அப்ரஹாவையும் படையினரையும் வியப்புக்குள்ளாக்கியது. உனைஸ் எழுந்து நிற்கும்படி யானையைப் பணித்தார். ஆனால் எவ்வாறோ நுபைலின் ஆணை ஆணித்தரமாகப் பதிந்து போனதால் யானையை எவ்விதத்திலும் அசைக்க முடியவில்லை. அதனை எழுப்ப எடுத்துக் கொண்ட முயற்சிகளெல்லாம் வீணாயின. இரும்புப் பாளங்களினால் அதன் தலையில் அடித்தனர். இரும்புக் கொக்கிகளால் வயிற்றில் தாக்கினர். யானை அசைவதாக இல்லை; மலைபோல் அமர்ந்திருந்தது.

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

யானை வருடம்
அன்றைய கால கட்டத்தில் யெமன் பிரதேசம் அபிஸீனியாவின் ஆட்சியின் கீழ் இருந்தது. இப்பிரதேசத்தின் அதிகாரியாக இருந்த அப்ரஹா ஓர் அபிஸீனியர்

முழு அறேபியாவினதும் யாத்திரைத் தலங்களில் உயரிடம் பெற்றிருந்த மக்காவின் மகோன்னத நிலையைத் தகர்க்கும் எண்ணத்துடன் அப்ரஹா ஸன்ஆவில் மாபெரும் ஆலயம் ஒன்றினை நிறுவினார். ஷீபாவின் இராணியினது கைவிடப்பட்ட மாளிகைகளுள் ஒன்றிலிருந்து பளிங்குக் கற்கள் கொண்டு வரப்பட்டன. தங்கத்தாலும் வெள்ளியினாலுமான சிலுவைகள் நிறுவப்பட்டன. பிரசங்க மேடை கருங்காலியும் யானைத் தந்தங்களும் கொண்டமைந்திருந்தது.

பின்னர் அப்ரஹா தனது எஜமானனாகிய நஜ்ஜாஷிக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
“ ஓ மன்னவனே! உமக்கு முன்னர் எந்தவோர் அரசனுக்கும் நிறுவப்படாததோர் ஆலயத்தை உமக்காக நான் அமைத்துள்ளேன். அறபிகளது புனித யாத்திரிகர்களை இதனை நோக்கித் திருப்பும் வரை நான் ஓய மாட்டேன்.” தனது நோக்கத்தை அவர் இரகசியமாக வைத்துக் கொள்ளவும் இல்லை. இது, ஹிஜாஸ், நஜ்த் பிரதேசங்களது அறாபிய கோத்திரத்தாரிடையே சினத்தை வளர்ப்பதாயமைந்தது. 

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

தேவை ஓர் இறைதூதர்…( தொடர்…)


ஒட்டகங்களின் பலியீடுகள் அனைத்தும் முற்றுப் பெற்றதும், மீட்கப்பெற்ற தனது மகனுக்குத் தக்கவொரு துணையைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டார் அப்த்-அல்-முத்தலிப். தீர்க்கமான சில விசாரணைகளின் பின்னர் வஹ்ப் என்பாரின் மகள் ஆமினாவைத் தேர்ந்தெடுத்தார். குஸையின் சகோதரனான ஸுஹ்ராவின் பேரன் இந்த வஹ்ப்.

ஸுஹ்ரா கோத்திரத்துத் தலைவனாகவிருந்து சில வருடங்களின் முன்னர் மரணித்துவிட்ட வஹ்ப்பின் இடத்தைப் பெற்றுக் கொண்ட அவரது சகோதரன் வுஹைப்பின் பொறுப்பிலேயே இப்போது ஆமினா இருந்தார். வுஹைபுக்கும் ஹாலா என்ற பெயரில், திருமண வயதை எட்டிய ஒரு மகள் இருந்தார். தனது மகனுக்கு ஆமினாவை மணமுடிக்க முடிவு செய்த அப்-அல்-முத்தலிப், ஹாலாவைத் தானே மணஞ்செய்து கொள்ளவென வுஹைபை வேண்டினார். வுஹைப் இதனை ஏற்றுக் கொள்ளவே இரண்டு திருமணங்களையும் ஒரே நேரத்தில் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.